Published : 18,Oct 2019 02:00 PM

ராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

BJP-Leader-Pon-Radhakrishnan-condemned-to-Seeman

ராஜீவ் காந்தி கொலை குறித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற யாத்திரை, அம்மா மண்டபத்தில் தொடங்கி திருவானைக் காவல் நான்கு கால் மண்டபம் வரை சென்றது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “ராஜிவ் காந்தி கொலை குறித்து சீமான் பேசும் பேச்சு ஏற்க தக்கதல்ல. வன்மையாக கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியினருக்கு கூட ராஜீவ்காந்தி கொலையின் வடு ஆறி விடும். ஆனால் பாஜகவினருக்கு வடு ஆறாது. அப்போது நடந்த தேர்தலில் 50,000 வாக்குகளை இழந்து நான் தான் பாதிக்கப்பட்டேன். 

மிசாவில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின்  சிறையில் அடைக்கப்பட்டது உண்மை. ஆனால் யார் கைது செய்து சிறையில் அடைத்தார்களோ? அவர்களோடு இவர்கள் கூட்டணி வைத்திருப்பதுதான் வேதனையானது. 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யும் கட்சிகளும், முறைகேடுகளில் ஈடுபடும் கட்சிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். பணப்பட்டுவாடா செய்கின்ற கட்சிகள் தேர்தலில் 6 ஆண்டு காலம் போட்டியிட தகுதி அற்றவர்களாக அறிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்