Published : 01,Aug 2019 02:58 AM
காலி ஆவின் கவர்களுக்கு 10 பைசா- ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவின் உள்ளிட்ட பால் கவர்களை முகவர்களிடமே கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மறு சுழற்சி செய்ய முடியாத நெகிழிப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு விலக்கு அளித்தது.
இந்நிலையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஆவின் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆவின் வாடிக்கையாளர்கள் காலி பிளாஸ்டிக் கவர்களை சில்லறை விற்பனை நிலையங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சில இடங்களில் கொடுத்து கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.