Published : 26,Aug 2017 01:18 PM
திமுக எம்எல்ஏக்கள் ஆளுநருடன் நாளை சந்திப்பு

சென்னை வந்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுகவினர் நாளை காலை 10.30 மணிக்கு சந்திக்க உள்ளனர்.
திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார். அதன்படி நாளை காலை 10.30 மணிக்கு திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ஆளுநரை சந்திக்க உள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருப்பதால் ஆளுநருடனான சந்திப்பில் பங்கேற்க மாட்டார் எனத் தெரியவந்துள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டச்சொல்லி திமுகவினர் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.
முன்னதாக, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.