Published : 08,Sep 2020 04:39 PM
காணாமல் போய் 15 ஆண்டுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த மனவளர்ச்சி குன்றியபெண்

மேற்கு வங்க மாநிலத்தில் காணாமல் போய், சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிடைத்துள்ளார் லஷ்மி பருய். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷிபூர் கிராமத்தில் அவரது வீட்டிலுள்ள தனது சகோதரர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை லக்ஷ்மி பருய் நெகிழ்ச்சியுடன் சந்தித்தார்.
சத்தீஸ்கர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் முயற்சியைத் தொடர்ந்து 55 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மேற்கு வங்கத்தில் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஷிபூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டில் சகோதரர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றதால், லக்ஷ்மி பருய் ஒரு உணர்ச்சிபூர்வமான வரவேற்பைப் பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் சித்தார்த் அகர்வால் "ஏப்ரல் 2017 இல், சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், அப்போது பார்வதி பாய் என அடையாளம் காணப்பட்ட இந்தப் பெண்ணை பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள செண்ட்ரி மனநல மருத்துவமனையில் சேர்த்தார், பின்னர் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம், சத்தீஸ்கர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திற்கு செண்ட்ரி மருத்துவமனையில் இருந்து ஒரு கடிதம் வந்தது, அந்த பெண் தனது நோயிலிருந்து மீண்டு வந்ததாகவும், அவர் மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பிரகனாஸ் மாவட்டத்தில் வசிப்பவர் என்றும் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க மருத்துவமனை அதிகாரிகளும் கேட்டுக்கொண்டதாக”அந்த அதிகாரி தெரிவித்தார்.
சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். ராமசந்திர மேனன் இது குறித்து மேற்கு வங்கத்தின் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதாகவும், பின்னர் அந்த பெண்ணின் உண்மையான பெயர் லக்ஷ்மி பருய் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு வங்க அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், அவரது அடையாளம் முறையாக கண்டறியப்பட்டது, என்றார்.
கடந்த சனிக்கிழமை அரசு, ரயில்வே காவல்துறையின் இரண்டு பெண் கான்ஸ்டபிள்களுடன் அந்தப் பெண்ணை ரயில் மூலமாக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு சென்றனர், பின்னர் அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார். அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி “அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகள் இருந்தாள். ஆனால் லஷ்மி பருய் பின்னர் அவள் கணவனால் கைவிடப்பட்டதால், அவர் தனது மகளுடன் தனது தந்தையர் வீட்டில் வாழ்ந்துவந்தார், பிறகு ஒருநாள் அவர் காணாமல் போனார்" என்று கூறினர். அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் இவரை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தனர், குறிப்பாக அவரது மகளுக்கு இப்போது திருமணமாகிவிட்டது.