Published : 30,Jul 2018 12:09 PM
‘தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக்’ - தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம்

இந்திய அணி பல திறமை வாய்ந்த கேப்டன்களை தனது நீண்ட வரலாற்றில் கொண்டுள்ளது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் சவுரவ் கங்குலி. சவுரவ் தனது கேப்டன்ஷிப்பில் பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். அதில், மகேந்திர சிங் தோனியும் ஒருவர். முன்னாள் கேப்டன் தோனி 2004 ம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில்தான் அறிமுகமானார்.
தொடக்கத்தில் தோனி 7ம் இடத்தில்தான் களமிறங்கி விளையாடி வந்தார். 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவு அப்போது இருந்தார் சவுரவ் கங்குலி. அப்போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தோனியின் திறமையை கங்குலி கண்டுணர்ந்தார். அதனால், அவரது பேட்டிங் வரிசையை மாற்றி அமைக்க நினைத்தார்.
இதுகுறித்த தனது பழைய நினைவுகளை கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். “2004ம் ஆண்டு தோனி இந்திய அணியில் இடம் பிடித்த தருணத்தில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளை 7வது இடத்தில் விளையாடினார். அப்போது பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியிலும் தோனி 7வது இடத்தில்தான் இறக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
நாளை போட்டி நடைபெறவிருந்த நிலையில், முதல்நாள் என்னுடைய அறையில் செய்தித்தாள் படித்துக் கொண்டே தோனியை ஒரு வீரராக எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவரிடம் நிறைய திறமைகள் இருந்தன. மறுநாள் காலை போட்டியில் டாஸ் வென்ற போது, என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று தோனியை 3வது இடத்தில் களமிறக்க நினைத்தேன்.
7வது இடத்தில் களமிறங்குவதாக நினைத்து தோனி டி-ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்தார். அவரிடம், தோனி நீங்கள் 3வது இடத்தில் களமிறங்குகிறீர்கள் என்று கூறினேன். என்ன சொல்கிறீர்கள்? நான் 4வது இடத்தில் களமிறங்குகிறேன். நீங்கள் 3வது இடத்தில் இறங்குங்கள் என்றேன்” இவ்வாறு கங்குலி கூறினார்.
கங்குலி பரிசோதித்த அந்தப் போட்டியில்தான் தோனி 148 ரன்கள் விளாசினார். அதில் 15 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அந்தப் போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதும் தோனிக்கு கிடைத்தது. அடர்ந்த முடிகளுடன் அதிரடியாக விளையாடிய தோனியை உலகிற்கு காட்டிய பெருமை கங்குலியையே சேரும்.
மேலும் கங்குலி பேசுகையில், ஒரு கேப்டனாகவும் தோனி வெற்றி பெற்றது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். ‘நான் விளையாட தொடங்கிய காலத்தில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருந்து சர்வதேச தரத்தில் வீரர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தது. நானும்(மேற்கு வங்காளம்), தோனியும்(ஜார்க்கண்ட்) அந்த எண்ணத்தை உடைத்துவிட்டோம்’ என்றார் கங்குலி.