17 ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே கண்டுவந்த ஆர்சிபி அணி 18வது ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது. ஒவ்வொரு தோல்வியின்போதும் தங்களுக்கு பக்கபலமாக இருந்த ‘Loyal Fans' என அழைக்கப்படும் ஆர்சிபி ரசிகர்களுடன் கோப்பை வென்ற மகிழ்ச்சியை கொண்டாட நினைத்தது ஆர்சிபி நிர்வாகம்.
அதற்காக சின்னசாமி ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்கு கர்நாடக அரசும் ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அதிகப்படியான கூட்டநெரிசல் ஏற்பட்டு, அதில் 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரசிகர்களின் உயிரிழப்பு கோப்பை வென்றும் ஆர்சிபி அணியால் கொண்டாட முடியாத சூழலுக்கு கொண்டுசென்றது.
உயிரிழப்புக்கு ஆர்சிபி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் முறையாக எங்களிடம் அனுமதி பெறவில்லை என கர்நாடக அரசு குற்றஞ்சாட்டியது. உயிரிழந்த ரசிகர்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது ஆர்சிபி நிர்வாகம். இது 2025ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய துயரச்சம்பவமாக மாறியது.
2025 ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் 5 ஐபிஎல் கோப்பைகள் வென்ற சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப்போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீசும்போது, சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருவரும் சேர்ந்து பால் டெம்பரிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சமூகவலைதளத்தில் வைரலான வீடியோவில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பொருளை எடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்தார். அதை வாங்கிய கேப்டன் ருதுராஜ் அதை மறைத்தாவாரே தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். இந்த நிகழ்வு சிஎஸ்கே வீரர்கள் பந்தை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை எழுப்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை பல ரசிகர்கள் முன்வைத்தனர். சில ரசிகர்கள் கலீல் அகமது தன்னுடைய மோதிரத்தைதான் ருதுராஜிடம் கொடுத்தார் என தெரிவித்தனர்.
ஆனால் முடிவில் அவர் என்ன பொருள் வைத்திருந்தார் என்பது குறித்து விசாரணையும் நடத்தப்படவில்லை, தெளிவுபடுத்த எந்த அறிக்கையும் விடப்படவில்லை.
விளையாட்டு போட்டிகள் நடைபெறும்பொழுது, வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வெற்றிப்பெறுவதை தடுப்பதற்காக உலகளவில் "உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA)" அமைக்கப்பட்டது.
இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியா தொடர்ந்து 3வது வருடமாக முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த WADA அமைப்பு சில நாட்களுக்கு முன்பு 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. WADA அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2024ஆம் ஆண்டு 260 இந்திய விளையாட்டு வீரர்கள் செயல்திறனை அதிகரிக்கும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாக சோதனையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் நடப்பாண்டிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக பல இந்திய தடகள வீரர்கள் இடைநீக்கம் மற்றும் தடை செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சிக்கிய நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஷிவ்பால் சிங், புனே அரை மராத்தான் வெற்றியாளர் பிரதான் விலாஸ் கிருளகர், தமிழக ஓட்டப்பந்தய வீராங்கனை தனலட்சுமி சேகர் மற்றும் 2014 ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற ஹேம்மர் எறிதல் வீரர் மஞ்சு பாலா ஆகியோர் அடங்குவர். மேலும் இரண்டு பயிற்சியாளர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. அப்போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற போட்டி ஒன்றிற்காக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் இந்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அப்போது, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இரண்டு பேர் அருகில் உள்ள உணவகத்திற்கு செல்வதற்காக வெளியே நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் அகீல் கான் என்பதை உறுதிசெய்த மத்திய பிரதேச காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுசார்ந்து பாஜக அமைச்சர் ஒருவர் சொன்ன கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் தெருநாய்க்கடி பிரச்னை என்பது பெரிய பேசுபொருளாக மாறியிருக்கும் சூழலில், டெல்லியில் அதன் தாக்கம் உச்சநீதிமன்றம் தலையிடும் அளவிற்கு பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. நாய்க்கடி பிரச்னை எந்தளவு இந்தியாவில் பூதாகரமாக இருக்கிறது என்பதற்கு சான்றாக, டெல்லியில் நடைபெற்ற உலக விளையாட்டு நிகழ்வில் நடந்த சம்பவம் எடுத்துக்காட்டாக மாறியது.
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது இரண்டு வெளிநாட்டு பயிற்சியாளர்களை தெருநாய்கள் கடித்தன. இது போட்டியின் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை எந்தளவு மோசமானதாக இருந்தது என்பதை அம்பலப்படுத்தியது. கென்ய பயிற்சியாளர் டென்னிஸ் மவான்சோ மற்றும் ஜப்பானிய பயிற்சியாளர் மிகோ ஒகுமட்சு ஆகியோர் நாய்க்கடியால் காயமடைந்தனர். இந்த சம்பவம் வார்ம்-அப் டிராக்கிற்கு அருகில் நடந்ததுதான் மோசமானதாக மாறியது.
சம்பவம் நடந்தபிறகு மைதானத்தைச் சுற்றியுள்ள நாய்களைப் பிடிக்க நடவடிக்கை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கு முன்னதாகவே விசயம் அம்பலப்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பாரா-ஸ்போர்ட் உலகப் போட்டியில் கலந்துகொண்ட சர்வதேச அணிகள் அடிப்படை பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரநிலைகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தின.
இந்தியாவிற்கு கால்பந்து ஜாம்பாவன் மெஸ்ஸி வந்தார், இந்தியாவில் எவ்வளவு கால்பந்து ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு மெஸ்ஸியின் வருகை உதாரணமாக இருந்தது. மெஸ்ஸியின் வருகைக்காக அதிகாலை 2 மணிக்கு விமானநிலையத்தில் காத்திருந்த ரசிகர்களும், மெஸ்ஸி வரவில்லை என்பதால் மைதானத்தை சூரையாடிய ரசிகர்களை எல்லாம் பார்க்கும்போது அடடா கால்பந்திற்கு இந்தியாவில் இப்படி ஒரு ரசிகர் பட்டாளமா என்ற ஆச்சரியம் எல்லாமே தொற்றிக்கொண்டது உண்மை தான்..
ஆனால் இந்தியாவிலும் கால்பந்து விளையாட்டு உள்ளது, இந்திய வீரர்களாலும் சிறந்த கால்பந்து விளையாட்டை கொடுக்க முடியும் என உலக அரங்கில் நிரூபித்துக்காட்டிய இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி, மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்வில் ஒருஓரமாக மேடைக்கு கீழே நிற்கவைக்கப்பட்டிருந்த காட்சியும், மெஸ்ஸி புகைப்படம் இடம்பெற்ற ஜெஸ்ஸியை அணிருந்திருந்த காட்சியும் ஒவ்வொரு உண்மையான இந்திய கால்பந்து விளையாட்டு ரசிகனுக்கும் ஆதங்கத்தையே ஏற்படுத்தியது. ஒரு நேரத்தில் அதிக சர்வதேச கோல்கள் அடித்த மெஸ்ஸியின் சாதனையை சமன்செய்தவரான சுனில் ஷேத்ரி, ஓய்வுக்கு பிறகு அதிக சர்வதேச கோல்கள் அடித்த கால்பந்துவீரர்கள் பட்டியலில் ரொனால்டோ (143), மெஸ்ஸி (115), அலி டேய் (108) மூன்றுபேருக்கு அடுத்த இடத்தில் 4வது உலக கால்பந்து வீரராக சுனில் சேத்ரி (95) இருந்துவருகிறார்.
இந்தியாவின் சிறந்த விருதுகளான அர்ஜுனா விருது (2011), பத்ம ஸ்ரீ விருது (2019), கேல் ரத்னா விருது (2021), 6 ஆண்டுகள் AIFF-ன் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது, 3 ஆண்டுகள் FPAI-ன் ஆண்டின் சிறந்த இந்திய வீரருக்கான விருது, 3 ஆண்டுகள் SAFF சாம்பியன்ஷிப் போட்டியின் சிறந்த வீரருக்கான விருது, 3 ஆண்டுகள் SAFF சாம்பியன்ஷிப்பில் அதிக கோல்கள் அடித்த வீரர், 2018-ல் இன்டர்காண்டினென்டல் கோப்பையின் ஹீரோ என இந்திய கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரரும், உலக அளவில் சாதித்த இந்திய வீரருமான சுனில் சேத்ரிக்கு சரியான மரியாதை கொடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீங்க வேற நாட்டுக்காக கால்பந்து விளையாடியிருந்தா உங்களுக்காகவும் இந்தியாவில் சிலை திறந்திருப்பார்கள் என பல இந்திய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து தொடரானது 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்தியாவில் கால்பந்து போட்டிகளுக்கான வரவேற்பை அதிகரிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 2025-26 சீசன் நடப்பாண்டு நடைபெறவில்லை. போட்டி வழக்கமாக செப்டம்பரில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் சூழலில், இந்த சீசனுக்கான (2025-26) ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) மற்றும் போட்டியை நடத்தும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் (FSDL) இடையேயான ஒப்பந்தம், உரிமைகள் மற்றும் நிர்வாகக் குழு சார்ந்து சிக்கல்கள் இருப்பதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் டிசம்பர் 8ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் இருதரப்பிற்கும் இடையே புரிந்துணர்வு சரியாக இல்லாததால் இந்திய கால்பந்து தொடர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையால் ஸ்பான்சர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எதிர்காலம் குறித்து கவலையில் இருக்கின்றனர். சில அணிகள் தங்களுடைய பயிற்சியை நிறுத்திவைத்துள்ளனர். தொடரை நடத்துவதற்கான வணிக பார்ட்னர்கள் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது இந்தியாவில் கால்பந்து தொடர் இனி நடக்குமா என்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பாண்டு 2025-ல் நடைபெற்றது. இத்தொடரில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக ஆட்டத்திற்குப் பிறகு கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தபோது, இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. மேலும் பாகிஸ்தான் பயிற்சியாளர் இந்திய அணியிடம் பேசச்சென்ற போது, இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகளும்கூட காணப்பட்டன.
பஹல்காம் தாக்குதல், ஆபரேசன் சிந்தூரை தொடர்ந்து இக்காட்சிகள் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்றன. கைக்குலுக்க மறுத்த இந்திய அணிக்கு எதிராக ‘இது விளையாட்டின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை கொச்சைப்படுத்துகிறது’ என பாகிஸ்தான் விமர்சித்தது. இந்திய தரப்பில் எதற்கு கைக்குலுக்க வேண்டும், விதிப் புத்தகத்தில் கைகுலுக்கல்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது, நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டது. இந்த NO Handshake விவகாரம் பெண்கள் கிரிக்கெட் போட்டிகள், முன்னாள் வீரர்கள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டிகள் என தொடர்ந்தது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை போட்டியில் இரண்டு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். அது களத்திற்கு உள்ளே மட்டுமில்லாமல், களத்திற்கு வெளியேயும் வெளிப்பட்டது. போட்டியின் போது சுப்மன் கில், அபிஷேக் சர்மா, ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் போன்ற வீரர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதை தாண்டி, பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷாகிப்சாதா ஃபர்ஹான் காட்டிய சைகைகள் சர்ச்சையை கிளப்பின.
2025 ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அரைசதமடித்த பாகிஸ்தான் வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான், அரை சதம் அடித்தவுடன் பேட்டை கையில் பிடித்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவதுபோல காட்டினார்.
அதேபோல மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் ஒரு விமானம் பறந்துகொண்டிருப்பது போலவும் திடீரென அது கீழே விழுவது போலவும் சைகை செய்து காட்டினார், மேலும் 6 என்ற எண்ணிக்கையும் அவர் கை விரல்களால் காட்டினார். இந்தியாவின் 6 விமானங்களை ஆபரேஷன் சிந்தூரின்போது வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிவரும் நிலையில், அதை மறைமுகமாக கூறும் வகையில் ஹாரிஸ் ராஃப் செய்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல்பாடுகள் சர்ச்சையை கிளப்பின. பின்னர் 2 வீரர்களுக்கும் ஐசிசி அபராதம் விதித்தது.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்ற பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உள் துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தது சர்ச்சையை அதிகரித்தது. மேலும் மொஹ்சின் நக்வியிடம் அல்லாமல் கோப்பையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காலித் அல் சரூனியிடமிருந்து பெற இந்தியா தயாராக இருந்தது.
ஆனால், மொஹ்சின் நக்வி அதற்கு மறுப்பு தெரிவித்து கோப்பையை தானே வழங்க விரும்புவதாக வலியுறுத்தினார். இதன் காரணமாக, கோப்பை வழங்கும் நிகழ்வு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது. 90 நிமிடங்கள் காத்திருப்பிற்கு பிறகு கோப்பை வழங்கப்படாமலேயே நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அந்தக் கோப்பையை மொஹ்சின் நக்வி எடுத்துச் சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.
இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இந்திய வீரர்களின் இந்தச் செயல் உலகம் முழுவதும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. விளையாட்டில் அரசியல் கூடாது என அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதேநேரத்தில், இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது. அதற்குப் பதிலளித்த நக்வி, ”கோப்பையை பெற பிசிசிஐ ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்காக பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார். தற்போதுவரை இந்தியா கோப்பை வாங்கவில்லை.
இந்தியாவிற்கு 3 நாட்கள் பயணமாக வந்திருந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது தில்லி ஆகிய நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்தார். அவருக்கு இந்திய அரசியல் தலைவர்கள், விளையாட்டு ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்தசூழலில் கொல்கத்தாவின் லேக் டவுனில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் மெஸ்ஸிக்காக நிறுவப்பட்ட 70 அடி சிலையை திறந்துவைத்த மெஸ்ஸி, மைதானத்தில் குழுமிருந்த ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சிலை திறப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு சால்ட் லேக் மைதானத்திற்கு வராமல் மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் மைதானத்தில் பார்ப்பதற்காக நிரம்பியிருந்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது, பின்னர் அடுத்தடுத்த இடங்களில் மெஸ்ஸி ரசிகர்களை பார்வையிட்டார்.
2025 ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக இனவெறி கருத்தை தெரிவித்ததால் கடும் சர்ச்சையில் சிக்கினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது , அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்த ஆர்ச்சரைப் பற்றிப் பேசும்போது சிங் விமர்சிக்கும் விதமாக (kaali taxi) கருப்பு டாக்ஸியை ஒப்பிட்டார்.
வர்ணனையில் பேசிய ஹர்பஜன் சிங், "லண்டனின் கருப்பு நிற டேக்ஸிகளின் மீட்டர்களைப் போல, ஜோஃப்ரா ஆர்ச்சரின் மீட்டர்களும் (ரன்கள்) அதிகளவில் இருக்கிறது" என்று விமர்சனம் செய்தார். ஹர்பஜனின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.
1976ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை 'Grovel' என்ற வார்த்தையை பயன்படுத்தி இனவெறி ரீதியலான கருத்தை தெரிவித்தார் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரெய்க். அப்போது தென்னாப்பிரிக்காவில் இனவெறி பிரச்னை அதிகமாக இருந்த சூழலில், தென்னாப்பிரிக்காவில் பிறந்த ஒருவர் ‘காலடியில் மண்டியிட வைப்பேன்’ என சொன்னது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை இனவெறியில் தாக்கிப்பேசியதாக தலைப்பு செய்தியானது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் ’குரோவல்’ என்ற வார்த்தையை பேசியது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே சர்ச்சையை மீண்டும் கொண்டுவந்தது. பல இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர்கள் உட்பட சுக்ரியின் கருத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.