“வடம் இப்போது அன்புமணியின் கையில்” - 100 நாள் நடைபயணம்.. பாமகவிலிருந்து ஓர் EXCLUSIVE
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. மீண்டும் தர்மமே வெல்லும். சூதும் வாதும் வேதனை செய்யும்.
திட்டவட்டமாக சொல்கிறோம்.. பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. அவரது பெயருக்குப் பின்னால் என் பெயரை போடக்கூடாது என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
25 ஆம் தேதியில் இருந்து நடைபாதை போக இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு டிஜிபியிடம் நாங்கள் புகார் மனு அளித்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய சூழல் இருப்பதால் காவல்துறை அதிக கவனம் எடுத்துகொண்டு தடை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ எனும் பெயரில் நாளை (ஜூலை 25) தொடங்கி நவம்பர் 1 ஆம் தேதி வரை மொத்தம் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணம் திருப்போரூரில் தொடங்கி தர்மபுரியில் நிறைவடைய இருக்கிறது.
சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை போன்ற 10 அடிப்படை உரிமைகள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருதாகத் தெரிவித்திருக்கும் அன்புமணி, அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் எனும் நோக்கத்துடனே நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய சூழலில்தான் பயணத்திற்கான தனது எதிர்ப்பினைப் பதிவு செய்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சியின் நிறுவனரின் அனுமதி இல்லாமல், கட்சி கொடி மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கும் பிரச்சாரப் பயணத்தை அன்புமணி மேற்கொள்வதாக ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், திட்டமிட்டபடி பயணம் தொடங்கும் எனத் தெரிவித்திருக்கிறார் அன்புமணி.
இந்நிலையில் பாமகவில் என்ன நடக்கிறது? மருத்துவர் அன்புமணியின் நடைபயணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் எப்படி நடக்கின்றன என்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
100 நாட்கள் திட்டமிடப்பட்டிருக்கிறது நடைபயணம்.. மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்?
களத்தில் தொடர்ச்சியாக இருக்கவேண்டுமென்று திட்டமிடும் இயக்கம் பாமக. சித்திரை முழுநிலவு மாநாடு பாமக எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை நிரூபித்தது. மக்களை நோக்கிப் பயணப்படுவதும், மக்களின் பிரச்னைகளை பேசுவதிலும், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை வலியுறுத்துவதிலும் பாமகவினர் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டுமென்பது மருத்துவர் அன்புமணியின் எதிர்பார்ப்பாக இருந்தது. மறுமுனையில், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மீண்டுமொருமுறை கிராமங்களுக்கு பயணப்பட வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த இரண்டு எண்ணங்களும் இன்று சாத்தியமாகியிருக்கிறது. 100 நாள் பயணம் அதையொட்டியே திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்த 100 நாள் பயணம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கட்சிக்குள் இருக்கும் சின்ன சின்ன சலசலப்புகளைத் தாண்டி, அன்புமணி ராமதாஸ் கரத்தினை வலுப்படுத்துவதற்கு எல்லோரும் ஓரணியில் இணைந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பொதுக்குழுவாக இருக்கட்டும், பொதுக்கூட்டமாக இருக்கட்டும்... கூட்டத்திற்கு வருபவர்கள் அன்புமணியைப் பார்த்ததும் ஆர்ப்பரிக்கிறார்கள். இந்தப்பயணம் எல்லோருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். மக்களுடன் அன்புமணி களத்தில் இருப்பார்.. இதுவரை மருத்துவர் அய்யா மக்களுடன் களத்தில் நின்றார். இனி அந்த வடத்தினை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையை இந்த 100 நாள் பயணம் கொடுக்கும்.
தமிழ்நாட்டு மக்களுக்கான 10 அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி பயணம் என தெரிவித்திருக்கிறீகள். பரப்புரை யுக்தி எப்படி இருக்கப்போகிறது?
ஆதம்பாக்கத்தில் நிகழ்ந்த நிகழ்வு கொடூரமானது. அந்த குடும்பம் இப்போதுவரை பாதுகாப்பாக உணரவில்லை. சற்று முன்புகூட அந்த தரப்பினர் தொலைபேசியில் பேசினார்கள். ‘காவல்துறையை பார்த்தால்கூட எங்களுக்கு பயமாக இருக்கிறது’ எனத் தெரிவிக்கிறார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக வளர்வதற்கு உரிமையில்லாத மாநிலமாக, விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உரிமையில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது. போதைப் பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டால் இருக்க முடியாது எனும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். இவையெல்லாமும் பேசுபடு பொருளாக மாற்றப்பட வேண்டும். அதையொட்டியே எங்களது பரப்புரை இருக்கும்.
கட்சியில் இருக்கும் சிறு சிறு சிக்கல்களை இந்த பயணம் சரிசெய்துவிடும் என நிர்வாகிகள் நினைக்கிறார்களா?
மருத்துவர் அய்யா மேல் அன்புமணி ராமதாஸ் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார். 40 ஆண்டுகால அரசியலில் தான் நினைத்தது இன்னும் நிறைவேறவில்லை என்று நினைத்தாரோ அல்லது இன்றைக்கு இருக்கும் அரசியல்போக்குக்களுக்கு ஈடுபட்டு தன்னால் செல்ல முடியவில்லை என்று நினைத்தாரோ.. ஏதோ ஒரு இடத்தில் அய்யாவின் மனம் சஞ்சலப்பட்டிருக்கலாம். அதனால்தான் இத்தகைய வார்த்தைகள் வெளிப்படுகிறதோ என்று நான் நினைக்கிறேன். ஆனால், எதிர்பார்ப்புகளை எல்லாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் பூர்த்தி செய்வார்.
இதை மாநாட்டிலேயே நிரூபித்துவிட்டார். குரு இருந்தால் கூட்டத்தைக் கூட்டுவார் என எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், அன்புமணி ராமதாஸ் அதைவிட ஒருபடி மேலேசென்று நிரூப்பித்தார். கட்சியினர் உண்மையிலேயே இதில் மகிழ்ந்தார்கள். அய்யாவின் கவலைகளால் வெளிப்படும் சொற்களை அன்புமணி ராமதாஸ் தனது செயல்பாடுகளால் பூர்த்தி செய்வார்.
இன்று காலை மருத்துவர் ராமதாஸ் பேசிய கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்?
NO Comments.. எல்லாவற்றிற்கும் செயல்தான் சிறந்த பதில். அதை அன்புமணி ராமதாஸ் உணர்ந்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் மருத்துவர் ராமதாஸின் எவ்விதமான கருத்துக்கும் பதில் பேசாமல் இருக்கிறார். அய்யா விரும்பியதை செய்துமுடிப்பேன் என்பதை மட்டும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார். ஒருநாள் இதையெல்லாம் பார்த்து அய்யா மகிழ்வார். திட்டமிட்டப்படி பயணம் தொடரும்.. நடக்கும்..