”நான் தான் ஏமாற்றப்பட்டேன்” - தொழிலதிபர் குறித்து நடிகை ரிஹானா சொன்ன அடுக்கடுக்கான அதிர்ச்சி தகவல்!
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை பூந்தமல்லி அருகே கரையான்சாவடி பகுதியை சேர்ந்தவர் ரிஹானா பேகம். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கும் சென்னை கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறி உள்ளது. தன்னை திருமணம் செய்து ஏமாற்றப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் மீது ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை முற்றிலும் மறுத்துள்ள ரிஹான பேகம், ராஜ் கண்ணன் மீது புகார் அளித்தும் இதுவரை பூந்தமல்லி காவல் நிலையத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்று தெரிவித்துள்ளார். அப்போது அங்குயிருந்த கூடுதல் ஆணையர் பவானீஸ்வரியிடம் புகார் அளித்தார்.
உடனடியாக இது குறித்து விசாரணை செய்து அடுத்த குறைதீர் முகாமில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் ஆணையர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சின்னத்திரை நடிகை ரிஹானா பேகம், ”ஊடகங்களில் தன்னை தவறாக சித்தரித்து செய்திகள் வெளியானது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் அவ்வாறு செய்யவில்லை.
”அவர்தான் என்னை ஏமாற்றினார்.. கேள்வி கேட்டதற்குதான்.. ”
என் தோழி மூலமாக அறிமுகமான ராஜ் கண்ணன் என்னுடைய சிறிய வயது முதல் கஷ்டபட்டு உழைத்த பணத்தை ரெஸ்ட்ரோ பார் துவங்க முதலீடாக பெற்று அதில் வருமானம் ஏதும் காட்டாமல் நஷ்டம் அடைந்து விட்டதாக கூறிவிட்டார். இதுவரை அவர் 15 லட்சம் ரூபாயை ஏமாற்றிவிட்டார். இதனை கேட்டதற்கு, என் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து என்னை அசிங்கப்படுத்தி வருகிறார்.
அது அவர் உண்மையான பெயரே இல்லை..
ராஜ் கண்ணன் என்பது அவரது போலியான பெயர். உண்மையான பெயர் அழகர் சாமி. அழகர் சாமி எனும் பெயரில் பல காவல் நிலையங்களில் புகார் உள்ளது. இதனை மாற்றி தனது பெயரை ராஜ் கண்ணன் என மாற்றி கொண்டு அதற்கு ஆதார், பான் என பல்வேறு அடையாள அட்டைகளை பெற்று பெண்களை ஏமாற்றி வருகிறார்.
ராஜ் கண்ணன் திருமணமாகி தனியாக (SINGLE PARENTS) இருக்கும் பெண்களை குறிவைத்து வலை வீசி அவர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கபளீகரம் செய்து வருகிறார். இந்த சூழலில்தான் தெரியாமல் நான் மாட்டிக்கொண்டு எனது பணத்தை இழந்தேன். பின்னர், எனக்கு தெரியாமலே எனக்கு தாலி கட்டி விட்டு உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி கொடுமை படுத்தினார். இதற்கு ஒத்துழைக்கததால் நான் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து எனது பெயரை களங்கம் செய்து வருகிறார்.
ரெஸ்ட்ரோ பாரில் முதலீடு செய்வதாக 15 லட்சம் பணம் பெற்று அந்த தொழிலையும் சரிவர செய்யாமல் ஏமாற்றி வந்ததால் எனது பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்து கேள்வி கேட்ட நாளிலிருந்துதான் இதுபோல பிரச்சனை செய்து வருகிறார்.
”தனித்து வாழும் பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்”
ராஜ்கண்ணன் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறார். வீட்டில் கத்தி, கொக்கைன் போதை பொருட்கள் கள்ள சந்தையில் கிடைக்க கூடிய போதை பொருட்கள் எல்லாம் வைத்து கொண்டு மிரட்டி விடுகிறார். அதுமட்டுமின்றி இலங்கை பெண் ஒருவரை எந்த வித அடையாள ஆவணங்கள் இல்லாமல் உடன் வைத்து கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இது போன்று பல்வேறு பெண்களை வைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகின்றார். இதன் மூலம் தான் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து மேலும் பணம் உடைய அழகான திருமணமாகி கணவருடன் இல்லாத பெண்களை குறிவைத்து காதல் வலை வீசி ஏமாற்றி வருகிறார்.
”சீமானை குறிவைத்தும் பணம் பறிக்க முயன்றார்”
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - நடிகை விஜயலட்சுமி பிரச்சனை ஏற்பட்டபோது சீமானை டார்கெட் செய்து அவரிடம் பணம் பறிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இளம் பெண்களுடன் சீமானை தொடர்பு படுத்தி அதனை வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.
இது மட்டும் இல்லாமல் ராஜ் கண்ணன் சின்னத்திரை பிரபல நடிகை மின்னல் தீபாவுடன் பழகி வந்து அவரது விவகாரத்திற்கு காரணமாக இருந்தார். தற்போது ஷீலா என்ற பெண்ணை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார். அவரை உடல் ரீதியாக பணப்படுத்தி வருகிறார்” என்றார்.
உரிய விசாரணை வேண்டும்!
”அவருடன் இருந்த புகைப்படம், சாட்டிங், ராஜ் கண்ணன் பேசிய வாய்ஸ் மெசேஜ் என பல்வேறு ஆதாரங்களை செய்தியாளர்களிடம் காட்டி தான் எந்த வித தவறும் செய்யாமல் பணத்தை இழந்து, எனது பெயர், நடிகை வாழ்க்கை வேலை என அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறேன்.
ஊடகங்கள் முறையான விசாரணை நடத்தி யார் மீது தவறு உள்ளது என வெளியிட வேண்டும். எதையும் விசாரிக்காமல் குழந்தையை வைத்து கொண்டு வாழ்க்கையில் போராடி வரும் என்னை போன்ற பெண்களை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் பூந்தமல்லி காவல் துறை முறையாக இந்த வழக்கை விசாரிக்காமல் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாகவும், ராஜ் கண்ணன் மற்றும் பாதிக்கப்பட்ட தன்னையும் அழைத்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.