அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகும் ஓபிஎஸ்; ஒரு கல்லில் மூன்று மாங்காய் அடிக்கப்போகும் விஜய்?
அரசியலில் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது! “எடப்பாடி பழனிசாமியின் காலில்கூட விழுகிறோம். தயவுசெய்து அதிமுகவில் சேர்த்துக்கொள்ளுங்கள்… இல்லையென்றால் மூன்றெழுத்து கட்சிதான் ஆட்சிக்கு வரும்”என்று பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள் சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் முன்வைத்த பகிரங்க கோரிக்கைக்குப் பிறகும்கூட அந்த வேண்டுகோளைப் புறந்தள்ளிவிட்டார் பழனிசாமி.
ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என்பதை பழனிசாமி திட்டவட்டப்படுத்தியோடு, கூடவே சமீபத்திய பேட்டி ஒன்றில், பாஜக கூட்டணியிலும் இவர்கள் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது பன்னீர்செல்வம் தரப்பை பெரும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அதிமுகவில் இணைய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாஜக தலைமையிலான கூட்டணியிலேனும் இணையலாம் என்ற நம்பிக்கைக்கும் இதன் மூலம் முடிவு கட்டிவிட்டார் பழனிசாமி. இத்தகு பின்னணியில், அடுத்தகட்ட ஆட்டத்துக்கு பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார் என்று தெரிவிக்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
”நாங்கள் இழப்பதற்கு ஏதும் இல்லை… எங்கள் தலைவர் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் கனவும் இல்லை… ஆனால், கட்சிக்காக இவ்வளவு காலம் உழைத்த எங்களுக்கு இப்படி முடிவு கட்ட வேண்டும் என்று பழனிசாமி எண்ணினால், அவருக்கு எப்படி பாடம் கற்பிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ஆட்ட நாயகராக எங்கள் தலைவரால் வர முடியாமல் போகலாம்; ஆனால், ஆட்டத்தை அவரால் மாற்றியமைக்க முடியும். பொறுத்திருந்து பாருங்கள்!” என்று சொல்கிறார்கள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், புதிய கட்சி தொடங்கினால், அதிமுகவுக்கு உரிமை கோரும் ஆட்டத்தை பன்னீர்செல்வம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிவரும். அதனாலேயே புதிய கட்சி தொடங்காமல், ”அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில் செயல்படும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய கட்சியை பன்னீர்செல்வம் தொடங்குவது உறுதி என்றும், ‘மாநாட்டு ஏற்பாட்டு பணிகள்’ என்ற பெயரிலான படை திரட்டும் வேலை எல்லாம் புதிய கட்சிக்கான ஏற்பாடுகள்தான் என்றும் சொல்கிறார்கள்.
பழனிசாமியுடனான சமரசத்துக்கு உதவாததோடு, கூட்டணியில் இடம் என்ற உத்தரவாதமும் தராததால் பாஜக மீது மிகுந்த ஏமாற்றத்தில்தான் இருக்கிறார் பன்னீர்செல்வம். ஆகையால், அதிமுக – பாஜக கூட்டணியில் இடம் இல்லாத சூழலில் விஜயின் தவெகவுடன் கூட்டணி கை கோப்பதற்கான ஆரம்ப கட்ட சமிக்ஞைகள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன என்கிறார்கள். விஜயைப் பொறுத்த அளவில் இது மூன்று பக்க லாபம்.
முதலாவது,
விஜய்தான் முதல்வர் என்று அவர் தலைமையிலான கூட்டணியை ஏற்று ஒரு அமைப்பு வருகிறது.
இரண்டாவது,
பன்னீர்செல்வம் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தவர்; கூடவே அவருடன் மூத்த தலைவரான பண்ரூட்டி ராமச்சந்திரனும் இருக்கிறார். எம்ஜிஆர் முதல் விஜய்காந்த் வரை உடன் இருந்தவர்; இது தேர்தல் களத்தில் இளைய கட்சியான தவெகவுக்கு கட்டமைப்பு சார்ந்த அனுபவ பலத்தைக் கொடுக்கும்;
மூன்றாவது,
அதுதான் எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது… பன்னீர்செல்வம் தங்களுடைய அணிக்கு வருவதன் மூலம் எம்ஜிஆர் – அண்ணா கொடிகளை, படங்களை தங்கள் வசம் ஆக்கிக்கொள்ள முடியும். இதன் மூலம் அண்ணா, எம்ஜிஆர் வழி வாரிசாக விஜயை முன்னிறுத்த முடியும். ஆகையால், இது இயல்பான கூட்டணியாக அமையும் என்று விஜயும் ஆக்கபூர்வமாக இந்த விஷயத்தை அணுகுவதாகக் கூறுகிறார்கள்.
இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், தேர்தல் களத்தில், தவெக கூட்டணிக்கு எவ்வளவு வாக்குகளை கூடுதலாக பன்னீர்செல்வம் பெற்றுத் தருவார் என்பதைவிடவும், பழனிசாமிக்கு எவ்வளவு சேதாரத்தை உருவாக்குவார் என்பதுதான் முக்கியமான விளைவாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து எதிர்கொண்டனர். அப்போது தமிழகம் எங்கும் அதிமுக பெற்ற வாக்கு 33.3 சதவீதம். அடுத்துவந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் அதிமுக பெற்ற வாக்கு 20.7 சதவீதம். குறைந்த வாக்குகளில் கணிசமான வீதம் பிளவுக்கு பழனிசாமி கொடுத்த விலை என்று சொல்லும் அரசியல் விமர்சகர்கள், தென் மாவட்டங்களில் அதிமுக பெற்ற வாக்குகள் மட்டுமே எவ்வளவு பெரிய சேதாரத்தை கட்சி எதிர்கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாகச் சுட்டுகிறார்கள்.
தென் தமிழ்நாட்டில், 2021இல் 42.5% சதவீதம் ஓட்டுகளைப் பெற்றிருந்த அதிமுக 2024இல் 15.9% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இவ்வளவு பெரிய இழப்புக்குப் பின் பன்னீர்செல்வமும் இருக்கிறார் என்பதே அவர்களது கணக்கு. “தனித்து நிற்கும்போது 2021இல் தினகரனுடைய கட்சி மட்டுமே 2.3% ஓட்டுகளைப் பெற்றது. எனில், பன்னீர்செல்வத்தால் இன்னும் கூடுதலான வாக்குகளைப் பெற முடியும் வெளிப்படை” என்கிறார்கள்.
இந்தக் கணக்கு பழனிசாமியின் முதல்வர் கனவை முற்றிலுமாக குலைக்கவல்லது. இதை பாஜக அனுமானித்ததால்தான் எல்லோரையும் ஒன்றிணைத்த அதிமுக – ஆட்சியில் பங்கு கொடுக்கும் கூட்டணி ஆட்சி எனும் யோசனையை அமித் ஷா முன்வைத்தார். ஆனால், பழனிசாமி மறுத்துவிட்டார். ஆனால், திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் பழனிசாமியின் முயற்சியில் பன்னீர்செல்வம் எடுக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் அதிமுகவுக்கு சவாலாக அமையும் என்கிறார்கள்.
பன்னீர்செல்வம் உருவாக்கும் சவால்களை பழனிசாமி எப்படி முறியடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!