களமிறங்கும் கலப்பு எரிபொருள் வாகனங்கள்.. 100% எத்தனாலில் ஓடும் மாருதி கார்!
பெட்ரோலிய எரிபொருட்கள் இந்தியாவுக்கு பெரிய பொருளாதார சுமையாக மாறிவரும் நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் கலப்பு எரிபொருள் வகை வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கம் தரத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக பெட்ரோல் அல்லது எத்தனால் அல்லது இரண்டின் கலப்பிலும் இயங்கக்கூடிய ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வகை வாகனங்கள் அடுத்தடுத்து களமிறங்க உள்ளன.
மாருதி நிறுவனம் 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது, 100% பெட்ரோல் அல்லது 100% எத்தனால் அல்லது இரண்டும் கலந்த எரிபொருள் என 3 வகைகளில் எதில் வேண்டுமானாலும் இயங்கும் திறன் பெற்றது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஹர்தீப் சிங் புரி பங்கேற்கின்றனர்.
அதேபோல், ஹீரோ நிறுவனமும் கலப்பு எரிபொருள் பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது. இதுபோன்ற வாகனங்களுக்கு என முதல் கட்டமாக 5 ஆயிரம் எத்தனால் பங்க்குகளை நாடெங்கும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. சர்க்கரை ஆலைகளில் இருந்து எத்தனால் அதிகளவில் கிடைப்பதால் அதை உள்நாட்டிலேயே முழுமையும் உற்பத்தி செய்துவிட முடியும்.
கலப்பு எரிபொருள் வாகனங்களால் மிகப்பெரிய அளவு எரிபொருள் இறக்குமதியை குறைப்பதுடன் உள்நாட்டு விவசாயிகளும் பலன் பெறுவார்கள் என அரசு கருதுகிறது. ஆனால், தற்போது விற்கப்பட்டு வரும் 20% எத்தனால் கலந்த பெட்ரோலே வாகனங்களை பாதிப்பதாகவும் புகார்கள் இருந்துவருகின்றன.

