இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய்..? காரணம் இதுதான்!
இந்திய ரிசர்வ் வங்கி 2012ல் கைவிட்ட பிளாஸ்டிக் ரூபாய் திட்டத்தை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பாலிமர் நோட்டுகள் காகித நோட்டுகளை விட நீடித்தும், உற்பத்திச் செலவைக் குறைத்தும், கள்ள நோட்டுகளை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் நிலையில், ஏடிஎம் இயந்திரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
செய்தியாளர்: M. மீரா
இந்திய ரூபாயின் வெளியீடு, விநியோகம் மற்றும் பணப்புழக்கத்தை கவனிக்கும் முக்கிய அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுகிறது. மேலும் இது நாட்டின் பண பரிவர்த்தனை முறைகளையும் நிர்வகித்து வருகிறது. ரிசர்வ் வங்கிக்கு உட்பட்டே பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
ரிசர்வ் வங்கி கடந்த 2012ஆம் ஆண் பிளாஸ்டிக் ரூபாய் திட்டத்தை முன்னெடுத்தது. எனினும் அப்போது எதிர்கொள்ளப்பட்ட சில தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள், சவால்களால் அந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது.
14 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி (RBI), பாலிமரால் ஆன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நாட்டில் ரூபாய் நோட்டுகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், பிளாஸ்டிக்கின் நீடித்து உழைக்கும் தன்மையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்று 'பிசினஸ் ஸ்டாண்டர்ட்' என்ற செய்தி நாளிதழ் தெரிவித்துள்ளது.
குறைந்த உற்பத்திச் செலவுகள் மற்றும் கள்ள நோட்டுகளின் குறைப்பு ஆகியவை இந்த மாற்றத்திற்கான மற்ற காரணங்களாகும். குறிப்பாக ரூபாய் நோட்டுகள் பேப்பர் காகிதங்களில் அச்சடிக்கப்படுவதால், அவை விரைவாகவே கிழிந்து விடுகின்றன. இதனை மீண்டும் புதிதாக அச்சடிப்பதற்காக ரிசர்வ் வங்கிக்கு அதிகமாக பணம் செலவாகிறது.
மேலும் காகித ரூபாய் நோட்டுகளை விடவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை கையாளுவதற்கு ஏதுவாக ஏடிஎம் இயந்திரங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிகிறது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, கனடா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அமெரிக்காவில் பருத்தி மற்றும் லினன் கலந்து டாலர்கள் வெளியிடப்படுகின்றன.

