செல்லூர் ராஜூ- அண்ணாமலை
செல்லூர் ராஜூ- அண்ணாமலை கோப்பு புகைப்படம்
தமிழ்நாடு

“வாக்காளர் பட்டியலை முன்னமே சரிபார்க்க வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியாதா?” – செல்லூர் ராஜூ

webteam

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்...

Sellur Raju

“தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கு”

“கடந்த 52 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு உழைக்கும் கட்சி அதிமுக. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், வாக்காளர்கள் பலரின் பெயர், பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கு என்று சொல்வதா? என்ன சொல்வது எனத் தெரியவில்லை. மதுரையில்தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால் எல்லா மாவட்டங்களிலும் இப்படித்தான் உள்ளது.

“கட்சியினர் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”

ஒவ்வொரு அரசியல் இயக்கங்களும் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களைக் கொண்டு இப்பணியை செய்தார்கள். அப்போது பூத் சிலிப்பை அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் கொடுத்தார்கள். இப்போது திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருப்பதால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் கட்சியினர் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

election commission

“வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து அண்ணாமலை ஏன் முன்னரே பேசவில்லை?”

பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் அதிபுத்திசாலி ஐபிஎஸ் படித்தவர் தற்போது பேசுகிறார். ஏன் முன்னரே பேசவில்லை? குறிப்பாக பாஜக வாக்காளர்கள் தூக்கப்பட்டு விட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை? தேர்தலில் தனக்கு சரியான வாக்குப்பதிவு இல்லை. தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார்.

இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கெனவே கொடுத்திருக்கணும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக் கூடிய திறமை படைத்த அண்ணாமலை, பிற கட்சியினரின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியலில் இருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப் போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? இதையெல்லாம் விட்டுவிட்டு, தற்போது கேரளாவுக்கும் கர்நாடகத்திற்கும் அண்ணாமலை போகிறார்.

Annamalai

“திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள்”

தமிழகத்திற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி. மோடியா இருந்தாலும் சரி. ஆனால், தமிழகத்திற்கு பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார். திமுக எம்.பி.க்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து, உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி ஜி பேசுவது சரியல்ல. அதை அதிமுக பொதுச் செயலாளரும் கூறி உள்ளார்.

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”

எம்.ஆர்.ராதா கூறுவது போல தமிழகத்தில் எல்லோரையும் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

தமிழகத்தில், இந்தியாவில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது. நாளைய நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள், விடிவெள்ளிகளான இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது மனதை வேதனையடையச் செய்கிறது.

Modi - Rahul Gandhi

வெறும் குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தை ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.