RCB Won 2024 WPL Tittle
RCB Won 2024 WPL Tittle X
கிரிக்கெட்

3 விசயங்களை தலைகீழாக மாற்றிய RCB மகளிர் அணி! கோப்பை வென்றதற்கான முக்கிய காரணங்கள் இதுதான்! #WPL

Rishan Vengai

விளையாடும் 10 அணிகளின் பெயரையும் RCB என மாற்றிவைத்தாலும் இறுதிப்போட்டியானது எதாவது காரணத்தால் தடைபட்டு ரத்தாகுமே தவிர, ஆர்சிபி அணியால் எப்போதும் கோப்பை வெல்லமுடியாது எனுமளவுக்கு ட்ரோல் செய்யப்பட்ட ஒரு அணி என்றால் அது ஆர்சிபி அணியாகத்தான் இருக்கும்.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணி, அதிக சதங்கள் குவித்த அணி, ஒரு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் என அனைத்து பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தாலும், நாக்அவுட் போட்டிகள் என்று வந்துவிட்டால் ஆர்சிபி அணி ஒரு சோக்கர்ஸ் அணியாகத்தான் எப்போதும் இருந்துள்ளது. 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு 8 முறை அரையிறுதிக்கும், 4 முறை இறுதிப்போட்டிக்கும் சென்ற ஒரே அணியாக ஆர்சிபி மட்டுமே இருந்துவருகிறது. ஆனால் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் கோப்பை எண்ணிக்கை 5ஆக இருக்கும் அதேநேரத்தில், 3வது பெரிய அணியாக இருக்கும் ஆர்சிபி அணியிடம் ஒரு கோப்பை கூட இல்லை என்பதே அதிகப்படியான ட்ரோல் மெட்டீரியலாக ஆர்சிபியை மாற்றியுள்ளது.

RCB

காலங்காலமாக RCB அணியின் தோல்விக்கு 3 முக்கிய காரணங்கள் பாதகமாக அமைந்திருக்கிறது. அந்த 3 தோல்விக்கான காரணங்களையும் 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் மாற்றியமைத்து கோப்பையை முதல் முறையாக வென்று அசத்தியுள்ளது ஸ்மிரிதி மந்தனா தலமையிலான ஆர்சிபி அணி.

அது என்ன 3 காரணங்கள்?

RCB

ஆர்சிபி அணி லீக் போட்டிகளில் புலியாக விளையாடினாலும், நாக் அவுட் போட்டிகள் என்று வந்துவிட்டால் எப்போதும் பூனையாக மாறிவிடும். ஆனால் இந்தமுறை அனைத்து குறைகளையும் சரிசெய்து களத்திற்கு வந்து கோப்பையை தட்டிச்சென்றுள்ளது. 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பை வென்றதற்கான 3 காரணங்கள் இதோ..

1. குறைவான ரன்களை டிஃபண்ட் செய்தது:

எப்போதும் ஆர்சிபி அணியிடம் இருக்கும் பெரிய குறை என்றால் அது பவுலிங் டிபார்ட்மெண்ட் தான். ரன்களை வாரிக்கொடுக்கக்கூடிய ஒரு அணியாகவே ஆர்சிபி அணி ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. பேப்பரில் கூட ஸ்டார் பேட்டர்கள் நிரம்பி வழியும் அதேநேரத்தில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஸ்டார் பவுலர்கள் இருந்ததே இல்லை. அதனாலயே ஒரேயொரு பவுலரை மட்டும் நம்பி களமிறங்கிய நிலையில் தான் ஆர்சிபி எப்போதும் இருந்துள்ளது.

RCB

ஆனால் 2024 மகளிர் ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ஆர்சிபி அணி, க்ளோஸ் என்கவுண்டர் போட்டிகளை நிறைய லீக் சுற்றிலேயே சந்தித்து அழுத்தமான சூழ்நிலையை சிறப்பாக கையாண்டது. அதிலும் முக்கியமான போட்டிகளில் ஆர்சிபி அணி உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக 2 ரன்கள் வித்தியாசத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்திலும் வென்று எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

RCB

உபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக 157 ரன்களையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 135 ரன்களையும் டிஃபண்ட் செய்த ஆர்சிபி அணி, குறைவான ரன்களை டிஃபண்ட் செய்யாத ஒரு அணி என்ற மோசமான ரெக்கார்டை உடைத்து அசத்தியது. க்ளோஸ் என்கவுண்டரில் சக்சஸாக இருந்த ஆர்சிபி அணி நாக்அவுட் போட்டிகளில் அந்த அனுபவத்தை சரியாக பயன்படுத்தி கொண்டது. ஒரு பவுலரை மட்டும் இல்லாமல் ஒரு குழுவாக பவுலர்கள் விக்கெட்டை பங்கிட்டு கொண்டது இதுவே ஆர்சிபி அணியில் முதல்முறை நடந்துள்ளது.

2. ஆல்ரவுண்டர் என்ற கோட்டாவில் கலக்கிய எல்லிஸ் பெர்ரி!

எப்போதும் ஆர்சிபி அணியிடம் இல்லாத ஒன்று என்றால் அது சிறந்த ஆல்ரவுண்டர் இல்லாதது தான். அந்த மிகப்பெரிய குறையை எல்லிஸ் பெர்ரி 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் தீர்த்து வைத்துள்ளார். பேட்டிங்கில் 312 ரன்களை குவித்து தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கும் அவர், சரியான நேரத்தில் பந்துவீச்சிலும் ஃபார்மிற்கு வந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.

ellyse perry

ஒன் டவுன் என்ற முக்கிய இடத்தில் களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி, ஆர்சிபி அணி இறுதிப்போட்டியில் இருக்க முக்கியமான காரணமாவார். ஆர்சிபி கோப்பையை வென்றதற்கான பெரிய காரணம் மற்றும் முக்கிய காரணம் எல்லிஸ் பெர்ரி என்ற மாயாஜால வீரர் மட்டும் தான்.

3. கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிரிதி மந்தனா!

ஆர்சிபி அணி இதுவரை கோப்பை வெல்லாத நிலையில், அதற்கு முக்கிய ஃபேக்டராக அமைந்தது சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காத கேப்டன்சியும் ஒரு காரணமாக இருந்துள்ளது. ஆனால் 2024 மகளிர் ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ஸ்மிரிதா மந்தனா சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

mandhana

வீரர்களை பேக்கப் செய்வது, சரியான நேரத்தில் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது, சந்தேகம் எழும் நேரத்தில் ஷோபி டெவைன் மற்றும் எல்லிஸ் பெர்ரி போன்ற மூத்தவீரர்களிடம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பது, பேட்டிங்கிலும் அழுத்தத்தை எடுத்து விளையாடுவது மற்றும் அழுத்தமான நேரத்தில் வீரர்கள் தவறிழைத்தால் மோடிவேட் செய்வது” என ஒரு பர்ஃபெக்ட் கேப்டன்சி மெட்டீரியலாக ஸ்மிரிதி மந்தனா செயல்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை ஸ்மிரிதி மந்தனா, ஷோபி டெவைன், மிடில் ஆர்டரில் எல்லிஸ் பெர்ரி, ஃபினிசிங் ரோலில் ரிச்சா கோஸ், பந்துவீச்சில் ஸ்ரேயங்கா பாட்டில், மொலின்யூ, ஷோபனா என ஒரு டீமாக ஆர்சிபி அணி தங்களுடைய வேலையை தரமாக செய்து கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. 16 வருட கோப்பை கனவை ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி தீர்த்து வைத்துள்ளது. ஆர்.சி.பி ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.