3 ஐஏஎஸ் அதிகாரிகள்
3 ஐஏஎஸ் அதிகாரிகள் ட்விட்டர்
இந்தியா

அரசு பணத்தில் உல்லாசம்| வெளிநாடு சென்ற 3 ஐஏஎஸ் அதிகாரிகள்.. தணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

Prakash J

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பிரபல கட்டடக் கலைஞர் லீ கார்பூசியர் (Le Corbusier ) அறக்கட்டளை, அவரது 50வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் பங்கேற்க, சண்டிகர் நிர்வாகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பின்பேரில், நிகழ்ச்சியில் பங்கேற்க 4 ஐஏஎஸ் அதிகாரிகளை சண்டிகர் நிர்வாகம் பரிந்துரைத்தது. அதில், 3 அதிகாரிகளுக்கு உள்துறை அனுமதி வழங்கியது.

அதன்படி, அப்போதைய ஆலோசகர் விஜய் தேவ், உள்துறைச் செயலர் அனுராக் அகர்வால், அரசுப் பணியாளர் நலத்துறை செயலர் விக்ரம் தேவ் தத் ஆகியோர் பிரான்ஸ் சென்றனர். அப்போது, இவர்கள் மூன்று பேரும், தங்களுக்குள்ளேயே மாறிமாறி மற்றவர்களுக்கான அனுமதி ஆணையில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. சண்டிகரின் தலைமை கட்டடக்கலை நிபுணருக்கு மட்டும்தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மாறாக மக்கள் பணத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் சென்று வந்துள்ளதாகவும், மத்திய கணக்கு தணிக்கை இயக்குநரகம் தற்போது தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

விமானத்தில் இவர்களுக்கான 'பிசினஸ் கிளாஸ்' டிக்கெட்டுக்கு தலா, 1.77 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், தங்களுடைய ஒருநாள் பயணத்தை அவர்கள் 7 நாட்கள் நீடித்ததும் தெரியவந்துள்ளது. பிரான்சில் இவர்கள் தங்கிய நட்சத்திர விடுதிக்கு ஏழு நாட்களுக்கு 14 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஏழு நாள் பயணத்துக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதாவது, இந்த பயணத்திற்காக விஜய் தேவிற்கு ரூ.6.5 லட்சமும், அனுராக் அகர்வாலுக்கு ரூ.5.6 லட்சமும், விக்ரம் தேவ் தத்திற்கு ரூ.5.7 லட்சமும் என மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களது பயணச் செலவு ரூ.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இது, அனுமதிக்கப்பட்ட தொகையை விட 40 சதவீதம் அதிகம். இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ள இரண்டு அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். ஒருவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். மக்கள் பணத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர் உல்லாசமாக வெளிநாடு சுற்றுலா சென்றது தணிக்கை அறிக்கையில் அம்பலமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சண்டிகர் நிர்வாகம், ”இந்த மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ”டெல்லி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது; பாஜக அரசின் திட்டம் இதுதான்” - அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு!