“பிறப்பால் அமெரிக்க குடிமக்களா?” ட்ரம்பின் உத்தரவை தடைசெய்த நீதிமன்றம்..!
Birthright Citizenship
பிறப்பால் குடியுரிமை என்பது ஒரு நாட்டு எல்லைக்குள் பிறக்கும் நபருக்கு தானாகவே வழங்கப்படும் தேசிய குடியுரிமை. Birthright Citizenship என அழைக்கப்படும் இந்த உத்தரவாதம் அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தால் கொண்டு வரப்பட்டிருந்தது. குறிப்பாக, இந்தச் சட்டம் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, முன்னர் அடிமைப்படுத்தப்பட்ட ஆப்ரோ அமெரிக்கர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு 1868 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம், “அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியேறிய மற்றும் அமெரிக்காவின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நபர்களும், அமெரிக்காவின் குடிமக்களாகவும், அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்களாகவும் இருப்பார்கள்” எனத் தெரிவிக்கிறது. இந்த சட்டத்தின் மீதுதான் ட்ரம்ப் கண் வைத்தார்.
இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பிறப்புரிமைக் குடியுரிமைக்கு எதிரான நிர்வாக உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார். அதாவது, அமெரிக்கக் குடியுரிமை அற்ற பெற்றோர்கள் அமெரிக்காவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும், அமெரிக்காவில் பிறந்த அவர்களது குழந்தைகளை அமெரிக்கக் குடிமக்களாகக் கருதமுடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். பிறப்புரிமை குடியுரிமை அமெரிக்காவிற்கு ஆவணமற்ற குடியேற்றத்தை ஊக்குவிக்கிறது என்று தெரிவித்த ட்ரம்ப் அதை ஒரு படையெடுப்புடன் ஒப்பிட்டுப் பேசினார்.
குழந்தைகளுக்கு ஆபத்து
இந்த முடிவு பிறந்த குழந்தைகளை நாடற்றவர்களாக மாற்றக்கூடும் என பலர் எச்சரித்தனர். இதனையடுத்து நாடுமுழுவதிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த நிலையில் மூன்று கூட்டாட்சி நீதிபதிகள் ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். ட்ரம்பின் உத்தரவு நடைமுறைக்கு வருவதைத் தடுக்க நாடுமுழுவதிலும் தடைஉத்தரவு பிறப்பித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அப்போது பேசியிருந்த பெரும்பாலான சட்ட அறிஞர்கள், ட்ரம்ப் விதித்த ஒரேயொரு நிர்வாக உத்தரவின் மூலம் பிறப்புரிமைக் குடியுரிமையை ரத்து செய்துவிட முடியாது என்றும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், கடந்த ஜூன் 27-ஆம் தேதி, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், நீதிபதிகள் "உலகளாவிய பொதுவான தடைகள்" மூலம் ஒரு கூட்டாட்சி அரசின் கொள்கைகளை முழுமையாகத் தடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்திருந்தது. அதாவது, அனைத்து மாநிலங்களிலும் அமல்படும் வகையில் உத்தரவுகளை வழங்க நீதிமன்றங்களுக்கு முழுமையான அதிகாரமில்லை என்பதே தீர்ப்பின் சாரம். அதே நேரத்தில், வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு 30 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அப்படி ஜூலை 27 வந்துவிட்டால் ட்ரம்பின் நிர்வாக உத்தரவு நடைமுறைக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன.
Class Action
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு மீண்டும் பலர் தங்களது குழந்தைகளின் சார்பாக புதிய வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த முறை வர்க்க நடவடிக்கையாக கொண்டு வந்தனர். அதாவது Class Action. வர்க்க நடவடிக்கை என்பது, ஒரு குழுவையோ அல்லது ஒரு வர்க்கத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவது. குறிப்பாக, வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் தனிப்பட்ட பெற்றோர்களாகவோ அல்லது குழந்தைகளின் பெயர்களாலோ அடையாளப்படுத்தப்பட மாட்டார்கள்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி Joseph Laplante, ட்ரம்ப் நிர்வாகத்தின் பிறப்புரிமை குடியுரிமையை நிராகரிக்கும் உத்தரவை நாடு முழுவதும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில், இந்த தடை 7 நாட்கள் இடைநிறுத்தப்பட்டு, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ட்ரம்ப் நிர்வாகம் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் உத்தரவு அமலுக்கு வந்தால், ஆண்டுக்கு 1.5 லட்சம் குழந்தைகள் குடியுரிமை இழக்கும் அபாயம் இருப்பதாக சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
"All persons born or naturalized in the United States, and subject to the jurisdiction thereof, are citizens..." எனும் வார்த்தைகள் மீண்டும் அதற்கான அர்த்தத்தைக் கோருகின்றன. அதற்காகவே, நீதிமன்றங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.