இனிமே இதுதான் ஆதிக்கத்தின் அளவுகோல்.. உலகை இரண்டாகப் பிளக்கப்போகும் AI!!
Information is wealth
இரும்புத்திரை திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு.. “மேஜர், information is wealth.. உன்ன விட உன்னப்பத்தி எனக்கு நல்லா தெரியும்..” என்பார் அர்ஜூன். ஆம், information is wealthதான். ஆனால், அந்த information யாரிடம் இருக்கிறது என்ற கேள்வி தற்போது AI மூலம் விவாதமாகியுள்ளது. AI data hubs மற்றும் data centerகள் நவீன உலகின் புதிய சக்தி மையங்களாக உருவாகியுள்ளன. உலகில் இருக்கும் மொத்த செல்வமும் 5% மக்களிடம் குவிந்து கிடக்கிறது என்பார்களே.. அந்தமாதிரி சில நாடுகள் மட்டுமே ஏஐ உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த data centerகளில் உள்ள தகவல்களை வைத்தே மருத்துவம், ராணுவம், கல்வி, விஞ்ஞானம், புதிய தொழில்நுட்பங்கள் என பல்வேறு துறைகளில் AI மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. முடிவில், அந்த மாடல்களும் அந்த நாடுகளுமே உலகின் தொழில்நுட்ப எதிர்காலத்தை தீர்மானிப்பவைகளாக உள்ளன.
நியூயார்க் டைம்ஸ் இதழில், The Global A.I. Divide என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதன் சுருக்கம், ‘AI உலக நாடுகள் மத்தியில் ஒரு பிளவை உண்டாக்கியுள்ளது’ என்பது. அதாவது இரு தரப்புகளாக உலக நாடுகளைப் பிரித்துள்ளது. முதலில், அதிநவீன AI கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கணினி சக்திகளை கொண்ட நாடுகள்; இரண்டாவது, அந்த கட்டமைப்புகள் இல்லாத நாடுகள். இந்த பிளவு புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்றும் புதிய சார்புகளை உருவாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI கட்டமைப்பு
Oxford பல்கலைக்கழகத்தின் சமீபத்திய அறிக்கை, உலகளவில் 32 நாடுகள் மட்டுமே AI தரவுமையங்களைக் கொண்டுள்ளன; எஞ்சியுள்ள பெரும்பாலான நாடுகள் இந்த தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் இல்லாமல் உள்ளன எனத் தெரிவித்துள்ளது. இதில், குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகில் மொத்தம் 195 நாடுகள் இருக்கின்றன. இதில், அமெரிக்கா, சீனா என இரு நாடுகள் மட்டுமே உலகளவிலான 90% AI data centerகளை இயக்கி வருகின்றன. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏஐ தரவு மையங்களே இல்லை. இந்தியாவில் 5 ஏஐ தரவு மையங்களும், ஜப்பானில் 4 ஏஐ தரவு மையங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
AI கட்டமைப்புகளில் சிறந்து விளங்கக்கூடிய நாடுகள் மிக வேகமாக தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைகின்றன. அத்தகைய கட்டமைப்புகள் இல்லாத நாடுகள் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. ChatGPT என்று அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே AI தொழில்நுட்பத்தில் பில்லியன் கணக்கான பணத்தை அமெரிக்க நிறுவனங்கள் கொட்டி வருகின்றன. அமெரிக்காவின் பெரிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் எல்லாம் AI பயன்பாடுகளுக்கு தேவையான தரவு மையங்களை (data center) உருவாக்குவதற்கான போட்டிகளில் ஈடுபட்டு பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து வருகின்றன. அமெரிக்காவின் AI உருவாக்க செலவில் மிகக் குறைந்த அளவே செலவிட்டு சீனா Deepseekஐக் களமிறக்கிய நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மேலும் தங்களது ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
AI துறையில் அதிக முதலீடு
இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் மெட்டா, அமேசான், ஆல்ஃபாபெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் என 4 நிறுவனங்களும் மொத்தமாக 320 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த செலவு என்பது கனடாவின் தேசிய பட்ஜெட்டுக்கு நிகரானது என்ற பார்வை இருக்கிறது. இதில் அமேசான் மட்டும் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சம் கோடி. இந்த மாதத்தில் கூட அமெரிக்காவின் வட கரோலினாவில் அமேசானின் செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த ஏஐ உலகை இரண்டாகப் பிளக்கிறது என்று பார்த்தோமே.. அதில் உள்ள சிக்கல்கள் என்னவென்றால், இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தாத பின்தங்கிய நாடுகளில் கல்வி, மருத்துவம், பொருளாதாரம் போன்றவற்றில் பின்னடைவு ஏற்படும். அதிகளவில் AI Data centerகளைக் கொண்ட நாடுகள் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் செல்வாக்கு பெற்ற நாடுகளாக மாறிவிடும். மற்ற நாடுகளின் தரவுகளையும் இந்த ஏஐ நிறுவனங்கள் சேகரிப்பதன்மூலம் அதிகார மையங்களாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Startup Ecosystem
StartupBlink CEO Eli David Rokah, உலகளாவிய தொழில்நுட்ப சூழலை வடிவமைப்பது இரண்டு விஷயங்கள் என்கிறார். முதலாவது செயற்கை நுண்ணறிவு.. இந்த AI இதற்கு முன்பு பார்த்திராத வேகத்தில் பொருளாதாரங்களை மறுவடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்கிறார். இரண்டாவது, உலகமயமாக்கல் என்பது பிராந்திய ரீதியாக கவனம் செலுத்தும் பொருளாதாரத்திற்கு தற்போது வழிவகுத்துள்ளது என்கிறார்.. சுருக்கமாக, புவிசார் அரசியல் நிலப்பரப்பு. இந்த இரண்டாவது வகையில், குறிப்பிட்ட இடத்தில் அல்லது குறிப்பிட்ட சூழலில் எந்த தொழிலைத் தொடங்கலாம் என்று நிறுவனங்கள் எடுக்கும் முடிவைக் குறிக்கிறது. Startup Ecosystem Report 2025 என்ற அறிக்கையை StartupBlink நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதில், உலகளவில் தொடங்கப்படும் startup நிறுவனங்களில் உணவு சார்ந்து தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு அதிகமான வளர்ச்சி என்கிறது அந்த ரிப்போர்ட். Hardware & IoT, and Energy & Environment போன்ற துறைகள் உள்ளன.
இந்தியாவின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அதாவது DPIIT அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2016 முதல் 2024 வரையிலான காலக்கட்டங்களில் DPIIT 56 தொழில்துறைகளில் Startup நிறுவனம் தொடங்குவதற்கான உரிமையை வழங்கியுள்ளது. அதில், முதலிடத்தில் ஐடி துறையும், இரண்டாவது இடத்தில் Healthcareஉம் இருக்கிறது. இந்தியாவில் AI தொழில்நுட்பத்தில் செய்யப்படும் முதலீடுகள் கடந்த ஆண்டைவிட தற்போது 49.9% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது மற்றொரு அறிக்கை. மேலேகுறிப்பிட்ட AI hubகளும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றன.
“எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் சர்வதேச விவகாரங்களில் அதிக செல்வாக்கு செலுத்தியுள்ளன. AI ஆல் இயக்கப்படும் எதிர்காலத்தில், கணிப்பொறி உற்பத்தியாளர்களும் அதே போன்ற ஒரு நிலையைக் கொண்டிருக்கலாம்” என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசியர் வில்லி லெஹ்டன்விர்டா தெரிவிக்கிறார். இதை நமது நாட்டின் முகேஷ் அம்பானி 2017 ஆம் ஆண்டே பேசியிருக்கிறார். “நான்காவது தொழில்துறை புரட்சியின் அடித்தளம் connectivity and data. data என்பது புதிய இயற்கை வளம். Data என்பது புதிய எண்ணெய் என்ற சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.. எது எப்படியோ தரவுகள் தான் எதிர்கால உலகை நிர்மானிக்கப்போகிறது..