நாமக்கல் தவெக பரப்புரை| ”சொன்னீர்களே.. செய்தீர்களா?” திமுக, அதிமுகவை விமர்சித்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நாமக்கல்லில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தவெக தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கினார். இரண்டாம்கட்டமாக நாகை, திருவாரூரில் ஈடுபட்டார். இந்நிலையில், 3ஆவது கட்டமாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்ற விஜய், அதன்பிறகு சாலை மார்க்கமாக நாமக்கல் வந்தடைந்தார். நாமக்கல்லில் உள்ள கே.எஸ்.திரையரங்கு அருகில் 11 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில், வழியெங்கும் இருந்த மக்கள் திரள் காரணமாக பிற்பகல் 2.30 மணியளவில்தான் வந்தடைந்தார்.
பின்னர் பரப்புரையில் பேசிய தவெக தலைவர் விஜய், “போக்குவரத்து ஹப் ஆக உள்ள நாமக்கல்லும், முட்டையும் ரொம்ப ஃபேமஸ்; தமிழ்நாட்டு மக்களுக்குச் சத்தான உணவான முட்டையைக் கொடுக்கும் ஊராக மட்டுமில்லாமல், உணர்ச்சியூட்டும் மண்ணும் இந்த நாமக்கல் மண். அண்ணன் கேப்டன் பேசிய, ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’ என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம். தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும், நாமக்கல்லைச் சேர்ந்த சுப்புராயன் அவர்கள்தான்” எனத் தனது பேச்சைத் தொடங்கினார்.
”வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா?”
தொடர்ந்து பேசிய அவர், “இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி எண் 456-இல் கொடுத்தது யாரு? சொன்னாங்களே... செஞ்சாங்களா? வாக்குறுதி எண் 50: ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை உலர் கலங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும். வாக்குறுதி எண் 66: கொப்பறை தேங்காய்களை, அரசே கொள்முதல் செய்து தேங்காய் எண்ணைய்யை உற்பத்தி செய்து நியாயவிலை கடைகளில் அவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை. வாக்குறுதி எண் 68: நியாயவிலைக் கடைகளில் நாட்டுச்சர்க்கரை, வெல்லம் விநியோகிக்க நடவடிக்கை. வாக்குறுதி எண் 152: போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம். இதையெல்லாம் சொன்னார்களே... செய்தார்களா?” என மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
கிட்னி திருட்டு விவகாரம்...
நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை, ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை. திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டில் அதிகம் பாதிக்கப்பட்டது நாமக்கல்லைச் சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளர்கள் எனச் சொல்லப்படுகிறது. இத்திருட்டுக்கு கந்துவட்டி கொடுமைதான் ஆரம்பப் புள்ளி. அச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், தவெக ஆட்சி அமைந்தவுடன் தண்டிக்கப்படுவர். விசைத்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் தேவையான தீர்வுகளை யோசித்து, எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்” என்றார்.
மக்கள் கேட்பது என்ன?
தொடர்ந்து அவர், “சுற்றுப்பயணத்தில் செல்லும்போது மக்கள் தொடர்ச்சியாக ஒரே விஷயத்தைத்தான் சொல்கிறார்கள். சாலை வசதி, நல்ல குடிநீர், மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு... இந்த அடிப்படை விஷயங்களைத்தான் மக்கள் கேட்கிறார்கள். ’விஜய் கேள்வி மட்டுமே கேட்கிறார். இவர் வந்தால் என்ன செய்வார்’ என கேட்கிறார்கள். கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்றவற்றில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது எனச் சொன்னோம். இதைத்தானே எல்லோரும் சொல்கிறார்கள் எனச் சொல்கிறார்கள். அதைத்தானே இதையும் சொல்கிறார்.. புதிதாக எதையும் சொல்லவில்லையே என்கின்றனர். ஒரு மனிதனுக்குச் சாப்பிட நல்ல உணவு, நல்ல குடிநீர், கல்வி, போக்குவரத்து, பாதுகாப்பான வாழ்க்கை... இதுதானே மனிதனுக்கு அடிப்படை தேவை. அதை சரியாகச் செய்வோம் எனச் சொல்வதுதானே சரி..
திமுகபோல் பொய்யான வாக்குறுதிகளை எப்போதும் கொடுக்க மாட்டோம். புதிதாகச் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வது? எனக்கு எதுவும் புரியவில்லை. செவ்வாய்க்கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காத்துல கல்வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடிப் பாதை போடப்படும், வீட்டிற்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும் என அடித்துவிடுவோமா? நம் முதலமைச்சர் அடித்துவிடுவாரே, அப்படி அடித்து விடுவோமா” எனப் பட்டியலிட்டார்.
”திமுகபோல பாஜகவுடன் அண்டர் கிரவுண்ட் டீலிங்கில் இருக்க மாட்டேன்...”
மேலும் அவர், “பாசிச பாஜகவுடன் எப்போதும் சார்ந்து போகமாட்டோம். திமுகபோல் அண்டர் கிரவுண்ட் டீலிங், மறைமுக உறவு என பாஜகவுடன் எப்போதும் இருக்கமாட்டோம். மூச்சுக்கு முந்நூறு முறை அம்மா என சொல்லிக்கொண்டு, பொருந்தா கூட்டணியை அமைத்துக்கொண்டு – கேட்டால் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி என சொல்லிக்கொள்கிறார்களே, அவர்கள்போலும் நாம் இருக்க மாட்டோம். இந்த பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? நீட்டை ஒழித்துவிட்டார்களா? கல்விக்குத் தேவையான நிதியை முழுதாகக் கொடுத்தவிட்டார்களா? பின் எதற்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என நான் கேட்கவில்லை.எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கிறார்கள்.
”திமுக - பாஜக மறைமுக உறவு”
இன்னொரு முக்கியமான விஷயம். அதிமுக - பாஜக நேரடி உறவுக்காரர்கள் என எல்லோருக்கும் தெரியும். அவர்கள்மேல் மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், திமுக குடும்பம் பாஜகவுடன் மறைமுக உறவில் இருக்கிறார்கள். தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்.
வரும் தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தீர்கள் என்றால், அது பாஜகவுக்கு வாக்களித்த மாதிரி. 2026-இல் தவெக Vs திமுகதான்; இதில் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோரின் குரலாய் களத்தில் இருக்கும் தவெக. இன்னொன்று கொள்கை என்ற பெயரில் மக்களையும் தமிழ்நாட்டையும் ஏமாற்றும் திமுக. இந்த இரு கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் 2026-இல் போட்டியே” எனப் பேசி தவெக தலைவர் விஜய் தனது நாமக்கல் பரப்புரையை நிறைவு செய்தார்.