ஒன்று அதிகாரம் அல்லது எதிர்க்கட்சியாக மட்டுமே இருப்போம்.. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ்!
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னரும் ஆட்சிப் பங்கு கோரிக்கையை வலுப்படுத்தி வருகிறது. ஸ்டாலின் மறுத்ததால், தவெகவுடன் சேரும் வாய்ப்பும் பேசப்பட்டது. இறுதியில் கூட்டணி நீடித்தாலும், கிரிஷ் சோடங்கர், இனி காங்கிரஸ் ஆட்சி அல்லது எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கும், நடுநிலை இல்லை என எச்சரித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வந்தனர்.
அந்த கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடபொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சங்கரவர்த்தி, எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி எம்.பி ஆகியோர் இது குறித்து வெளிப்படையாகவே பேசினர்.
ஆனால் திமுகத் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பதை மறுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் விஜயின் தவெகவுடன் கூட்டணி சேரவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் சேரும் என்றும் இதற்கு ராகுல் காந்தியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்றும் தகவல் வெளியானது.
மேலும் இறுதிக்கட்டத்தில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில், இதன் பின்னணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டெல்லியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிடபொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாட்டில் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சி, அதிகாரம் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் இருக்கும் என்றும், இனி அதிகாரமற்ற நிலையில் நடுநிலையாக அங்கம் வகிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் முடிவுக்கு பிறகு எங்கள் உரிமைகளை கேட்டு பெறுவோம் என்று கூறிய அவர், ஆட்சியில் பங்கு அல்லது எதிர்கட்சி என்று செயல்பட முடிவு செய்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்பதை புரிந்துகொண்டோம் என்றும் கூறியுள்ளார்.

