“முதல்வர் ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் படம் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது” - ஆ.ராசா எம்பி!
‘காத்துவாக்குல ஒரு காதல்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய அவர், “நான் சார்ந்து இருக்கின்ற திராவிட கழகம் தமிழ், இலக்கியம், கலையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தாலும்கூட நான் அரசியலுக்கு வந்த 90களில் அதிகமான நேரத்தை என்னால் சினிமாவுக்கு ஒதுக்க முடியவில்லை.
எப்போதாவது கலைஞரோடு புதிய படங்கள் பார்க்கும் அனுபவம் உண்டு. நாங்கள் பார்த்த திரையுலகமும் இன்றைக்கு இருக்கின்ற திரையுலகமும், நாங்கள் அனுபவித்த இசையும் இன்றைக்கு உள்ள இசையும் இரு வேறு உலகத்தில் இருக்கின்றனவோ என்ற அளவிற்கு இருக்கின்றன.
இன்றைக்கு உள்ள திரை உலகம் வளர்ந்து இருக்கின்றதா..? முதிர்ச்சி அடைந்து இருக்கின்றதா..? அல்லது சிலர் சொல்வதைப் போல சீரழிந்திருக்கிறதா..? என்பதை எல்லாம் நான் மிகப்பெரிய ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாதவன்..
ஆனால், காதலும் வீரமும் தமிழர்களுடைய வாழ்க்கையில் இரண்டற பின்னியிருந்ததை திராவிட இலக்கியங்கள் மற்றும் சங்கப் பாடலிலிருந்து பல்வேறு விதமான குறிப்புகள் மூலம் அண்ணா மற்றும் கலைஞர் என இருவரும் எழுத்தில் எடுத்துக்காட்டிருப்பதை நாங்கள் எல்லாம் படித்து வளர்ந்தவர்கள்.
இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின், கலைஞர் எழுத்தில் ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சாதி ஒழிப்பு குறித்த மையக் கருத்து அடிநாதமாக அமைந்திருக்கும். எப்போதுமே ஒரு கருத்தை செயற்கையாகவோ இயற்கையாகவோ நம் மீது வடித்துக் கொள்கிறபோது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகம். நானே கூட எட்டாம் வகுப்பு படிக்கின்ற வரை திராவிட இயக்கம் என்றால் என்ன.? பெரியார் யார்? கலைஞர் யார்? அண்ணா யார்? என்று அறியாதவன்.
பேச்சுப்போட்டிக்காக என்னுடைய தமிழாசிரியர் எழுதிக் கொடுத்த வாசகங்களை பேசி நான் பரிசு பெற்றேன். அதற்கு பிறகு அண்ணாவை பெரியாரை கலைஞரை தெரிந்துகொண்டேன். அவர்கள் வாயிலாக சங்க இலக்கியத்தை திராவிட பண்புகளை எல்லாம் அறிந்து இன்றைக்கு ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளேன்.
அதற்கு காரணம் திராவிட இயக்கம் தந்திருக்கின்ற கலை, இலக்கியம், அரசியல் உணர்வு தான். அந்த அடிப்படையில் முதலமைச்சர் நடித்த ஒரே ரத்தம் திரைப்படம் கூட மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது..
சினிமாவாக இருந்தாலும் கலையாக இருந்தாலும் இலக்கியமாக இருந்தாலும் சமூகத்தில் இருக்கிற புழுக்கத்தை சமூகத்தில் இருக்கிற கொதிப்பை வெளியே கொண்டு வந்து அவற்றை தீர்க்கக் கூடிய ஒரு தீர்க்கமான ஆயுதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற இயக்கம் திராவிட இயக்கம்” எனத் தெரிவித்தார்.