கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு.. 1.6 கிலோ வெள்ளி வாள் காணிக்கை!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வென்று முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக முதல்வர் விஜய் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை தேவி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதற்காக, டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, சாலை மார்க்கமாக கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த முதல்வர் விஜய், 1.6 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளை கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் விஜயின் வருகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கருப்புக்கொடி காட்ட முயன்ற 20-க்கும் மேற்பட்டோரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
விஜய்யின் கொல்லூர் வருகைக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாற்று உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் கொல்லூருக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தராக இருந்துள்ளார். குறிப்பாக அவர், முதலமைச்சராக இருந்தபோது, மூகாம்பிகை அம்மனுக்கு ஒரு தங்க வாளைக் காணிக்கையாகச் சமர்ப்பிதிருக்கிறார். இன்றும் சிறப்புப் பூஜைகள் மற்றும் திருவிழாக்களின் போது எம்ஜிஆர் கொடுத்த வாள் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல, எம்ஜிஆர்-ன் மனைவி ஜானகி ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் மூகாம்பிகை அம்மனை தரிசித்துள்ளனர்.
தேர்தல் பரப்புரையின் போது மற்றும் முதல்வராக பதவியேற்றப் பிறகு என முதல்வர் விஜய் மசூதி, தேவாலயங்கள் மற்றும் கோயில்கள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வருகிறார். அந்தவகையில் தான், இன்று புகழ்பெற்ற மூகாம்பிகை கோயிலுக்கு சென்றிருக்கிறார்.

