மின்வெட்டு விவகாரம் | ஜூன் 19-ல் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்.. கே. பழனிசாமி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவது பொது மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தசூழலில் தான், தமிழ் நாட்டில் நிலவி வரும் மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திட வேண்டும் எனவும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள விவசாயக் கடனை தேர்தல் வாக்குகுறுதிகளில் கொடுத்துள்ளபடி நிறைவேற்ற வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி, வரும் ஜூன் 19-ம் தேதி அதிமுகவின் விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே. பழனிசாமி தெரித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிமுகவின் அறிக்கையில், ”நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாமிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், "கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000/-த்திற்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள விவசாயிகளுக்கு ரூ.5,000/- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றி உள்ளது தவெக அரசு.
மேலும், மக்கள் ஒவ்வொரு நாளும் வேதனை அடையும் வகையில், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், முகம் களிக்கும் வகையில் அர்த்தமற்ற காரணங்களை தவெக அரசு கூறி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஆட்சிக்கு வந்த குறுகிய நாட்களிலேயே, விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை தவெக அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்து, ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியதாகும்.
இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும்; தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும் தவெக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், 19.6.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. இரா. பசுபதி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

