“பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது” இபிஎஸ்ஸை விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வரலாற்றின் தொடக்கம்
ஈரோட்டில் ரூ.1368.88 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துகெண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ சாமிநாதன், அன்பில் மகேஸ் பெய்யாமொழி, மதிவேந்தன் மற்றும் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் எம்.பி சுப்புராயன், ஈரோடு எம்.பி கே.இ பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, ஏ.ஜி வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், ரூ.951 கோடியில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தபின், ரூ.133 கோடியில் 222 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஈரோடு மண்தான் தமிழகத்தில் புதிய வரலாற்றின் தொடக்கம். காரணம் பெரியாரை கொடுத்தது இந்த மண். பெரியார், அண்ணாவையும் கலைஞரையும் கொடுத்துள்ளார். இவர்கள் இல்லாமல் திராவிட இயக்கம் இல்லை.
தந்தை பெரியார் போட்ட அடித்தளம் காரணமாக கேரள மக்கள் திராவிட மாடல் ஆட்சியை பாராட்டுகின்றனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தது எனக்குள் சோகத்தை கொடுத்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் இழப்பு. அவருக்கு இக்கூட்டத்தின் வாயிலாக அஞ்சலி செலுத்துகிறேன்” எனக் கூறினார்.
“எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி புலம்புகிறார்”
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் குறித்தும் விவரித்து பேசினார். மேலும், “கடந்த ஆட்சியாளர்களுக்கு தற்போதைய அரசின் வெற்றிகளை தாங்கி கொள்ளமுடியவில்லை என்பதால் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி புலம்புகிறார். திமுக அரசு மீது குற்றம்சாட்ட எதுவும் இல்லாமல் பொய் சொல்கிறார். இது அவருடைய பதவிக்கு அழகல்ல. தொடர் திட்டங்களை தருவதால் அரசிற்கு மக்கள் ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனை கடந்த ஆட்சியாளர்களான எதிர்கட்சியினரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசிற்கு மக்கள் ஆதரவு கிடைப்பதால் வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புலம்பிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
சொன்னதைச் செய்யும் திராவிட மாடல் அரசு
தொடர்ந்து பேசிய அவர், “ஆளுங்கட்சியின் மீதான புகார் நியாயமானதாக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், திமுக அரசின் மீது குற்றம்சாட்ட எதுவும் இல்லாமல் பொய் சொல்லக்கூடாது. இது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழகல்ல. ஃபெஞ்சல் புயலுக்கு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பல லட்சம் மக்களின் உயிரை காப்பாற்றியுள்ளோம்.
ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் மாநில அரசே அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி கற்பனை குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். முன்னெச்சரிக்கை இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்ததாக எடப்பாடி பழனிச்சாமி பொய்யை பரப்பினார். ஆனால், ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உயிரிழப்புகளை தவிர்த்துள்ளோம். இதுதான் உண்மை. அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் அணை திறந்து 200க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அப்போது அமைச்சர் களத்திற்கு செல்லாமல் தன்னார்வலர்கள் தான் உதவி செய்தனர். செம்பரம்பாக்கம் அணை திறந்து சென்னையை மூழ்கடித்தது மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவு.
சாத்தனூர் அணையை வைத்து எடப்பாடி பழனிச்சாமி பொய் பேசிக்கொண்டிருக்கிறார். இதனை சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளோம். இதனால் தற்போது டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏலத்திற்கு விட்ட ஒன்றிய அரசை கண்டிக்காமல் மாநில அரசை குறை சொன்னார். இதற்கு அமைச்சர்கள் பதிலளித்தும் சட்டமன்றத்தில் வாழைப்பழ காமெடி போல் சொன்னதை திரும்ப திரும்ப சொன்னார். காலி குடம் உருண்டால் சத்தம் அதிகமாக வரும். அதுபோல் எடப்பாடி பழனிச்சாமி உருண்டு புரண்டு சத்தம்போட்டாலும் அதில் உண்மை ஒரு துளியும் கிடையாது.
பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது
பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது. நான்கு வருட ஆட்சியில் இருந்து பதவி சுகத்திற்காக பலருக்கு துரோகம் செய்து தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தது அதிமுகதான் என மக்களுக்கு தெரியும். மாநில அரசை பார்த்து கத்தி பேசும் எதிர்கட்சியினருக்கு ஒன்றிய அரசை கீச்சுக்குரலில்கூட பேச பயம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டல மக்கள் திமுக-விற்கு கொடுத்த வெற்றி மகத்தானது. மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” என்றார். பின்னர், பல்வேறு துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கோவையில் மறைந்த முன்னாள் எம்பி மோகனின் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நகர கழக செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி கட்சிக்கு பெருமை சேர்த்தவர் மோகன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வந்தேன்.
ஈரோட்டில் கள ஆய்வு நடத்தினேன். இன்னும் உற்சாகத்தோடு பணியாற்ற உறுதிபூண்டிருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் 200 எனும் இலக்கை நாங்கள் வைத்துள்ளோம். ஈரோட்டில் கள ஆய்வில் 200ஐயும் தாண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும்” எனத் தெரிவித்தார். அப்போது அவரிடம், ‘நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கின்றீர்கள்’ என செய்தியாளர் ஒருவர் கேட்கவே, அவர் “நல்லாதான் பார்க்கிறேன்” என பதிலளித்து கடந்து சென்றார்.