புதுக்கோட்டை அடுத்த மேட்டுப்பட்டி அருகே உள்ள தோப்புப்பட்டியை சேர்ந்தவர் ராசப்பன். 70 வயது முதியவரான இவர், அப்பகுதியில் உள்ள சிறிய கோயிலில் பூசாரியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை அசோக் நகர் அருகே புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அப்போது பேருந்து வருவதை அறியாமல் சாலையை கடக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப்பேருந்து அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த முதியவர் ராசப்பன், உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விபத்து குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், முதியவர் ராசப்பன் சென்ற இருசக்கர வாகனத்தில் பேருந்து மோதும் சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு அந்த காட்சியை பார்ப்பவர்கள் நெஞ்சை பதறவும் வைத்துள்ளது.
மேலும் அந்தக் காட்சியில், ராசப்பன் தனது இரு சக்கர வாகனத்தில் அவரது வலது புறம் வரும் பேருந்தை பார்க்காமல் சாலையைக் கடக்க முயன்ற போது, பேருந்து ராசப்பன் இருசக்கர வாகனத்தில் மோதி இழுத்துச் சென்று விபத்துக்குள்ளானதும் பதிவாகியுள்ளது. சாலையை கடக்கும் தருணங்களில் கவனத்துடன் இருந்தால், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.