”என் விரல் உடைந்தாலும் நாட்டிற்காக விளையாடுவேன்..” - பண்ட் சொன்னதை வியந்து பாராட்டிய ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 225/2 என்ற வலுவான நிலையில் பேட்டிங் செய்துவருகிறது.
வலியால் துடித்த ரிஷப் பண்ட்..
முதல் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்ட காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 37 ரன்கள் அடித்திருந்த ரிஷப் பண்ட், கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் லெந்து பந்தை ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயன்றார். பந்து மிஸ்ஸாகி ரிஷப் பண்ட்டின் கால் விரலை வேகமாக தாக்கியது. இதனால் தாங்க முடியாத வலியை அனுபவித்த ரிஷப் பண்ட் மைதானத்திலிருந்து வாகனத்தின் மூலம் வெளியே கொண்டுசெல்லப்பட்டார். அப்போது அவருடைய காலில் ரத்தம் கசிந்தது.
இந்த சூழலில் ரிஷப் பண்ட் ஸ்கேனுக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், அவரால் மீண்டும் வந்து பேட்டிங் செய்ய முடியாது, தொடரிலிருந்தும் வெளியேறுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் காயத்துடன் மீண்டும் பேட்டிங் செய்யவந்த ரிஷப் பண்ட் வலியுடன் விளையாடி 54 ரன்கள் அடித்து, இந்தியாவை 358 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.
என் விரல் உடைந்தாலும் விளையாடுவேன்..
ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடியது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, ”நான் இரண்டாவது ஆட்டத்திற்கு முன் ரிஷப் பண்ட் இடம் நீங்கள் நாளை விளையாடுவீர்களா? உங்களுடைய விரல் உடையவில்லை தானே? என்று கேட்டேன். அதற்கு அவர், கண்டிப்பாக விளையாடுவேன், என்னுடைய கால் விரல் உடைந்திருந்தாலும் நான் அணிக்காக விளையாடுவேன் என்று கூறினார்.
ரிஷப் பண்ட் ஒரு முழுமையான அணி வீரர், அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார், அவர் நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்” என்று ரவி சாஸ்திரி வியந்து பாராட்டினார்.
பண்ட் குறித்து பேசியிருக்கும் தினேஷ் கார்த்திக், “முதலில் ரிஷப் பண்ட்டை இங்கிலாந்து அதிகமாக நேசிக்கிறது. இப்படியான காயத்துடன் நீங்கள் பேட்டிங் செய்யவந்து 16-18 ரன்கள் அடிப்பது உத்வேகத்தை தரக்கூடியது. விளையாட்டில் வாழ்நாள் முழுவதும் வாழும் தருணங்களாக சில எப்போதும் இருக்கும், ரிஷப் பண்ட்டும் இந்த சம்பவத்தால் நீண்ட காலம் நினைவில் கொள்ளப்படுவார்” என்று பாராட்டியுள்ளார்.