40 நாளில் குணமான மனைவி.. புற்றுநோய்க்கு தீர்வு ஸ்பெஷல் டயட்டா? பல்டி அடித்த கிரிக்கெட் வீரர் சித்து!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்து, பின்னாளில் அரசியல்வாதியாக மாறியவர் நவ்ஜோத் சிங் சித்து. இவருடைய மனைவி நவ்ஜோத் கவுர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் வெறும் 40 நாட்களில் நிலை 4 மார்பக புற்றுநோயை வென்றதாகக் கூறியிருந்தார். அதாவது, ”வேப்ப இலை, மஞ்சள், ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை வினிகர், இடைவிடாத உண்ணாவிரதம் ஆகியவை புற்றுநோயை குணப்படுத்தும்” என நவ்ஜோத் சிங் சித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார்.
மேலும், ”உடலுக்கு உணவு கிடைக்காமல் போவதால், புற்றுநோய் செல்கள் இயற்கையாகவே இறக்கத் தொடங்குகின்றன” என விளக்கமளித்திருந்தார். இந்தக் கருத்து, இணையதளங்களில் வைரலானது. இதுகுறித்து பல மருத்துவர்களும் பதிலளிக்கத் தொடங்கியுள்ளனர்.
”வேப்ப இலைகள், மஞ்சள், ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை நீர் அல்லது இடைவிடாத உண்ணாவிரதம் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்ற கூற்றை நிரூபிக்க எந்த அறிவியல் சான்றுகள் இல்லை” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளின்படி , வேம்பு சில புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் காட்டியுள்ளது. இருப்பினும், இந்த பண்புகளை முழுமையாக ஆராய்ந்து, புற்றுநோய் மேலாண்மையில் வேம்பு திறம்பட ஒருங்கிணைக்க மேலும் ஆராய்ச்சி தேவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல், நுரையீரல், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு எதிராக மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும் என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. சிகாகோ பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, ஆப்பிள் சைடர் வினிகர் சில நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதாவது எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும், புற்றுநோயை குணப்படுத்தும் எந்த பண்புகளும் இதில் இல்லை என தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து விளக்கம் கொடுத்த சித்து, புற்றுநோய் போன்ற முக்கியமான நோய்களை நிர்வகிப்பதில் சுகாதார அமைப்பு மற்றும் அணுகக்கூடிய மருத்துவச் சிகிச்சைகளின் இன்றியமையாத பங்கை வலியுறுத்தினார். ஒழுக்கமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர், “புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அறுவைச்சிகிச்சைகள், கீமோதெரபி, ஹார்மோன் மற்றும் இலக்கு சிகிச்சை, கடுமையான உணவுத் திட்டம் மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாடு ஆகியவை அடங்கும். ஒன்றாக, இந்த முயற்சிகள் நோயெதிர்ப்பு சிகிச்சையின் ஒரு வடிவமாக செயல்பட்டன” என விளக்கம் கொடுத்துள்ளார்.
சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். டாடா மெமோரியல் மருத்துவமனையின் முன்னாள் புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் ருபிந்தர் பத்ராவின் மேற்பார்வையில், ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள வர்யம் சிங் மருத்துவமனையில் அவரது பெரும்பாலான சிகிச்சைகள் நடந்தன. சித்து ஒரு பதிவில், டாக்டர் பத்ராவுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பித்தக்கது.