“பயந்துட்டோம்னு நெனச்சீங்களா” - புரட்டிப்போட்ட பஹல்காம் பயங்கரம்.. காஷ்மீர் முதல்வர் எடுத்த முடிவு!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்முவில் முடங்கிப்போன சுற்றுலாவை மீட்க முக்கிய முடிவை எடுத்து, அதனை செயல்படுத்தியும் இருக்கிறார் ஜம்மு காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா. தீவிரவாத தாக்குதல் அரங்கேறிய இடத்திற்கே சென்றவர், அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். நடப்பவை குறித்து பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். சுற்றுலா வந்தவர்களில் ஆண்களை மட்டும் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், பல பெண்கள் கணவர்களை இழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 7ம் தேதி ஆப்ரேஷன் சிந்தூர் மூலமாக சுமார் 100 தீவிரவாதிகளை கொன்றொழித்தது இந்திய ராணுவம். இரு நாடுகளுக்கிடையே நடந்த மோதல், மே முதல் வார இறுதியில் உச்சம் தொட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீரில் முக்கியமான சுற்றுலாத்தளமாக இருக்கிறது பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கு. மினி சிவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் நடந்தேறிய தாக்குதலால் நிலைமை படுமோசமானது. பலரும் சுற்றுலாவுக்கு விரும்பிச் செல்லும் அந்த இடத்தில், இப்படி ஒரு கொடூர தாக்குதலா என்று பயணங்களை ரத்து செய்யத் துவங்கினர். பஹல்காமில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுற்றுலாவை நம்பி வாழும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை இயல்பு நிலைக்கு கொண்டு வர, தாக்குதல் நடந்தேறிய பஹல்காமிலேயே அமைச்சரவை கூட்டத்தை கூட்டி இருக்கிறார் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா. சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற அவர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முக்கிய விடயங்களை கூறி இருக்கிறார். ”இந்த கூட்டம் அரசின் வழக்கமான நடவடிக்கை கிடையாது. இதுபோன்ற தீவிரவாதத்தால் இங்கு சுற்றுலாவை முடக்க முடியாது. இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீர் மக்களின் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என்ற செய்தியை சொல்லவே இங்கு வந்தோம்.
கடினமான நேரத்தில், பயங்கரவாதிகளுக்கு அஞ்சாமல், தீரத்தோடு காயமடைந்தவர்களுக்கு உதவிய காஷ்மீர் மக்களுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம். கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் பயந்துவிடவில்லை என்று கூறியுள்ளார். அதோடு, காஷ்மீரை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும், சுற்றுலாத்துறையை மீட்கவும் அடுத்தடுத்த இடங்களில் அமைச்சரவை கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார் உமர் அப்துல்லா. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மீட்பதில் இது முக்கிய நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.