இந்தியர்களிடையே அதிகரித்து வரும் தூக்கமின்மை பிரச்னை... எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்!
இந்தியர்களிடையே தூக்கமின்மை பிரச்சினை அதிகரித்து வருவதாகவும் இதனால், நீரிழிவு நோய், உடற்பருமன், கொழுப்புக் கல்லீரல், பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுவருவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொருவரும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். அவ்வாறு தூங்காவிட்டால், அது தூக்கமின்மை என்று வகைப்படுத்தப்படுகிறது. இந்திய நகரங்களில் 59% பேர் ஒரு நாளைக்கு வெறும் 6 மணி நேரத்துக்குக் குறைவாகவே தூங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆழ்ந்த தூக்கமின்மையால் உடலில் மன அழுத்தம், நீரிழிவுக்கான ஹார்மோன்கள் சுரப்பதாகவும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல், எட்டு மணி நேரம் தூங்கினாலும், சீக்கிரமே படுக்கைக்குச் செல்ல வேண்டும். நள்ளிரவு தாண்டிய பிறகு படுக்கைக்குச் செல்வதும், இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதும் பலவித நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்... குறைந்தபட்சம் நடைப்பயிற்சியாவது செய்தால்தான், உடலுறுப்புகளின் இயக்கம் சீராவதுடன், தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்பையும் அது குறைக்கும் என்று கூறுகின்றனர். தூங்கச் செல்லும் நேரத்தில், மொபைல் போன் பார்ப்பதையும், காஃபி குடிப்பததையும் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.