Mother Teresa|ஆக்னஸ் அன்னை தெரசா ஆன கதை..!
அன்னை தெரசா, ஆக்னஸ் கான்ஸ்ஸா போஜக்ஹியு, 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பிறந்தார். 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறந்தார். அல்பெனியன் வம்சாவளியை சேர்ந்தவர். கொல்கத்தாவில் கத்தோலிக்க சமய சபையை நிறுவி, ஏழை எளியோர், நோய்வாய்ப்பட்டோர், ஆதரவற்றோர்களுக்கு நாற்பது வருடங்களுக்கும் மேலாக தொண்டாற்றியுள்ளார். மிகச் சிறந்த சமூக சேவகராக உலகம் முழுவதும் புகழப்பட்டவர். அடிப்படையில் கிறிஸ்தவ மத அமைப்பின் கன்னியாஸ்திரி சேவையில் ஈடுபட்டாலும் பிற்காலத்தில் அனைத்து வகையான மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து உலகப் புகழ் பெற்றவர் அன்னை தெரசா.
அன்னை தெரசா, மாசிடோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்பியே எனும் ஊரில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதியில் பிறந்தார். நிக்கோலாய் போஜோஜியூ, ட்ரெனபிள் போஜோஜியூ இவரின் பெற்றோர். தெரசாவுக்கு ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர். அன்னை தெரசா 26ஆம் தேதி பிறந்திருந்தாலும், அவர் பிறந்த அடுத்த நாள் ஆகஸ்ட் 27ம் தேதி அவருக்கு கிறிஸ்தவ சம்பிரதாயப்படி பெயர் சூட்டபட்டது. அதனால் அந்த நாளையே அதாவது ஆகஸ்ட் 27ம் தேதியையே தன்னுடைய பிறந்த நாளாக அன்னை தெரசா கொண்டாடினார்.. அன்னை தெரசாவிற்கு 8 வயதாக இருந்தபோது, அவரது தந்தை காலமானார். தனது 18 வயது வரை தாயார் மற்றும் உடன்பிறந்த சகோதர, சகோதரியுடன் ஸ்கொப்பியே நகரில் வாழ்ந்து வந்தார்.
கிறிஸ்தவ மத நம்பிக்கைகளில் தீவிரமான ஈடுபாடு கொண்டு வளர்ந்த அன்னை தெரசா, தனது 12 வயதில், வாழ்க்கையையே கிறிஸ்தவ மதத்திற்காகவும், பிறருக்கு சேவை புரிவதற்காகவும் அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என விரும்பி தனது 18வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, அயர்லாந்து நாட்டில் இருந்த 'சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ' என்ற கிறிஸ்தவ மத அமைப்பில் கன்னியாஸ்திரியாக தன்னை இணைத்துக் கொண்டார். சில மாத பயிற்சிக்குப் பிறகு, அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.. அங்கு மே 24, 1931 அன்று, அவர் ஒரு கன்னியாஸ்திரியாக பணியை தொடங்கினார்..
தெரசா கண்ட துன்பமும் வறுமையும்
பின்னர் 1931 முதல் 1948 வரை, அன்னை தெரசா கல்கத்தாவின் செயிண்ட் மேரி உயர்நிலைப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு கற்பித்தார்.. ஆனால் அந்த கான்வென்ட் சுவர்களுக்கு வெளியே அவர் கண்ட துன்பமும் வறுமையும் அவருக்குள் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.. இதனால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதல் அவரை 1948 ஆம் ஆண்டில் கான்வென்ட் பள்ளியை விட்டு வெளியேற செய்தது..
பின்னர் கல்கத்தாவில் உள்ள ஏழைகளில் ஏழ்மையானவர்களிடையே பணியாற்றுவதற்கு தனது மேலதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றார். அவரிடம் போதுமான நிதி இல்லை என்றாலும், அவர் தெய்வீக அருளைச் சார்ந்து இருந்தார்.. மேலும் குடிசைப் பகுதி குழந்தைகளுக்காக ஒரு திறந்தவெளிப் பள்ளியைத் தொடங்கினார். அதன் பிறகு அவரது சேவையை பார்த்த தன்னார்வ உதவியாளர்கள் பலரும் அவருடன் இணைந்தனர். அதனால் அந்த அமைப்புக்கு நிதி உதவியும் அதிகமாக வர தொடங்கியது. அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது.
"தி மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி"
அதனைத் தொடர்ந்து 1950 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, அன்னை தெரசா, "தி மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி" என்ற தனது சொந்த அமைப்பைத் தொடங்க புனிதப் பீடத்திடமிருந்து அனுமதி பெற்றார். பின்னர் மிஷனரீஸ் -ஐ தொடங்கி, தனது முதன்மை பணியாக யாரும் கவனிக்காமல் ஆதரவற்றவர்களாக இருப்பவர்களை நேசிப்பதும் பராமரிப்பதும் என தனது மகத்தான பணியை முழு வீச்சில் செய்ய தொடங்கினார்.. ' யாருமே நெருங்கி சென்று சிகிச்சையளிக்க தயங்கிய தொழுநோயாளிகளிடம் தயங்காமல் சென்று, தன்னால் இயன்ற சேவைகளை செய்தார்..
1965 ஆம் ஆண்டில், இந்த அமைப்பு ஒரு சர்வதேச மதக் குடும்பமாக மாறியது. இன்று இந்த அமைப்பு பல நாடுகளில் சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் ஆக்டிவ் மற்றும் கன்டெம்ப்ளேட்டிவ் கிளைகளைக் கொண்டுள்ளது. முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் மிஷனரிகள் சங்கம் பரவியுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பல நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு அவர்கள் பயனுள்ள உதவிகளை வழங்கி வருகின்றனர்..
சர்வதேச சங்கமாக மாறிய மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி
மேலும் வெள்ளம், தொற்றுநோய்கள் மற்றும் பஞ்சம் போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் அகதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த அமைப்பிற்கு வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் வீடுகள் உள்ளன.. அங்கு அவர்கள் அடைக்கப்பட்டவர்கள், குடிகாரர்கள், வீடற்றவர்கள் மற்றும் எய்ட்ஸ்-ஆல் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்கிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி, மார்ச் 29, 1969 அன்று அதிகாரப்பூர்வ சர்வதேச சங்கமாக மாறிய சக பணியாளர்களால் உதவி பெற தொடங்கியது.. . 1990 களில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சக பணியாளர்கள் இந்த அமைப்பில் இருந்தனர். சக பணியாளர்களுடன் சேர்ந்து, சாதாரண மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியும் தங்கள் குடும்பங்களில் அன்னை தெரசாவின் உணர்வு மற்றும் சேவையை பின்பற்ற முயற்சித்தனர்..
அன்னை தெரசாவின் பெயரில் உள்ள அமைப்புகள்
அன்னை தெரசாவின் பணிகள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளன, மேலும் அவர் பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றுள்ளார், அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா உட்பட பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளையும், இந்தியா மற்றும் பல நாட்டு பல்கலைக்கழகங்களின் கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார். அருங்காட்சியகம், கல்வி நிறுவனம், சாலை என பல்வேறு இடங்களுக்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பின்பற்றத்தக்க எத்தனையோ கருத்துகளை அவர் உதிர்த்திருக்கிறார். அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
அன்னை தெரசா சொன்ன பொன்மொழிகள்
1. புன்னகையே அன்பிற்கான தொடக்கம்.
2. தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மோசமான வறுமை
3. ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை.
4. சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை இருக்கு...
5. மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல. அதனால் எப்போது மற்றவர்களுக்கு உதவ வேண்டும்..
6. உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், பரவாயில்லை வெறும் ஒருவருக்காவது உணவு கொடுங்கள்..
7. நாம் இந்த வேலையை செய்கிறோம் என்பது அற்புதமல்ல, அதை செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே அற்புதமான விஷயம்..
8. நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது. அதனால் முதலில் மனிதரை நேசிக்க கற்றுக்கொளுங்கள்..
9. நம் அனைவராலும் உயர்ந்த விஷயங்களைச் செய்யமுடியாது. ஆனால், உயர்ந்த அன்பைக் கொண்ட சிறிய விஷயங்களைச் செய்யமுடியும்.
10. அன்பு தான் உனது பலவீனம் என்றால் உலகில் மிகப்பெரிய பலசாலி நீ தான்'
அன்னை தெரசா பெயர்க்காரணம் பற்றி தெரியுமா?
மேற்கு வங்காளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு 1929 ஆம் ஆண்டு ஆக்னஸ் வந்தார். அங்கு விதிகளின் படி, புதிதாக வந்து சேர்பவர் பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் பணிவிடை செய்வதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொள்ள நினைத்தவர். அதற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்க வில்லை. ‘காசநோய்' காரணமாக தனது 24-ம் வயதில் இயற்கை எய்தினார். அவரது நினைவாக தனது பெயரை "தெரசா" என்று மாற்றிக் கொண்டார்.
அன்னை தெரசா பெற்ற விருதுகள் என்னென்ன?
1. 1962-இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது,
2. 1972-இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, சர்வதேச புரிந்துணர்வுக்கென ஜவஹர்லால் நேரு விருது,
3. 1973-இல் டெம்பில்டன் விருது, 1977 ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்,
4. 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு,
5. 1980-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாரத் ரத்னா விருது,
6. 1982 ல் பெல்ஜியம் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்,
7. 1985-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிக உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம், சுதந்திரத்திற்கான பிரசிடன்ஸியல் விருது,
8. 1996ல் அமெரிக்காவின் கௌரவப் பிரஜை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டில் இறந்தார்.