US seized iranian ship  web
உலகம்

பேச்சுவார்த்தைக்கு ஆள் அனுப்பிவிட்டு.. அமெரிக்கா செய்த மோசம்! ஈரானுக்கு ஏமாற்றம்!

ஈரானுடன் சாத்தியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, தனது குழுவை இஸ்லாமாபாத்திற்கு அனுப்புவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஈரானிய சரக்கு கப்பலை அமெரிக்கா சிறை பிடித்தது என்ற அறிவிப்பு வெளியானது.

PT WEB

இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்புவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரான் கொடி ஏற்ற சரக்குக் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது. இதை ஈரான் ‘ஆயுதமேந்திய கடற்கொள்ளை’ என கண்டித்து, ஓமான் வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்களுக்கு ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக 2 வார காலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் ஏப்ரல் 22, புதன்கிழமையன்று முடிவடைய உள்ளது. அதே நேரம் ஹார்முஸ் ஜலசந்தி மீதான முட்டுக்கட்டையும் தொடர்கிறது. புதன்கிழமைக்குள் எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், போர் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.

trump

போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இன்று (ஏப்ரல் 20 ) இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் அதிகாரிகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருந்தனர் .

ஏப்ரல் 11 அன்று தோல்வியடைந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நகரின் செரீனா ஹோட்டலில் 2 வது சுற்று பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது .

தனது "பிரதிநிதிகள்" திங்கள்கிழமை மாலை இஸ்லாமாபாத்திற்கு வருவார்கள் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் இந்த பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார் .

drone attack

இவ்வாறு டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தடையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருந்தார் .

இதை ’ஆயுதமேந்திய கடற்கொள்ளை செயல்’ என்று ஈரானின் இராணுவத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து ஈரான் மௌனம் காக்காது என்றும், வாஷிங்டனுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

ஈரான் - அமெரிக்கா போர்

இதனைத் தொடர்ந்து இன்று ஓமான் வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான தஸ்னிம் தெரிவித்துள்ளது . இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தத் தகவலும் இன்னமும் வெளியாகவில்லை .

இந்நிலையில் பாகிஸ்தானில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈரான் கலந்துகொள்ளுமா என்பதை ஈரான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை அதிகாரிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Pak PM & Mohammad Bagher Ghalibaf

இந்தசூழலில் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "தற்போதைய நிலையில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டங்களும் எங்களிடம் இல்லை, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றில் கலந்துகொள்வதா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று கூறியிருப்பதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.