இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமைதிக்காக உருவான ஐரோப்பிய ஒன்றியத்தில், 1973ல் இணைந்த பிரிட்டன் 2016 பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் 52% ஆதரவுடன் 2019ல் வெளியேறியது. ஆனால் வர்த்தகத் தடைகள், விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், யூகோவ் கணிப்பில் 55-60% மக்கள் வெளியேறியது தவறு எனக் கருதி மீண்டும் EU-வில் சேர வேண்டும் என விரும்புகின்றனர்.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐரோப்பாவில் மீண்டும் போர் ஏற்படுவதை தடுக்கவும், அந்நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. முதலில் பிரிட்டன் இதில் இணைய மறுத்தாலும், அதன் பின்னர் 1973-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது.
அப்போது பிரிட்டனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 67% மக்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவை பயன்படுத்தாமல், அந்நாட்டின் நாணயமான பவுண்டையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின்படி, உறுப்பு நாடுகளின் குடிமக்கள் எந்த நாட்டிற்கும் சுதந்திரமாகச் சென்று வேலை செய்யலாம் என்ற விதி இருந்தது. இதனை பயன்படுத்தி ஐரோப்பாவின் பிற பகுதிகளிலிருந்து, குறிப்பாகப் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அதிகப்படியான மக்கள் பிரிட்டனுக்குக் குடியேறினர்.
இதனால் பிரிட்டன் குடிமக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை விட மேலோங்கி இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது. அதே போல ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தால் மற்ற நாடுகளுடன் தனிப்பட்ட முறையில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என்றும், எனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் உலக நாடுகளுடன் சுதந்திரமாக வர்த்தகம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 52% மக்கள் வெளியேறவும், 48% மக்கள் தொடரவும் வாக்களித்தனர். இதன் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது.
இதன் பின்னர் ஐரோப்பாவிலிருந்து வரும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படுவதால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதே போல ஐரோப்பியப் பணியாளர்கள் வெளியேறியதால் பிரிட்டனின் மருத்துவமனை, உணவகம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இது பிரிட்டனின் பொருளாதாரத்தையே பாதித்துள்ளது.
இதனால் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர வேண்டும் என ஆர்வம் பிரிட்டன் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் யூகோவ் என்ற கருத்து கணிப்பு நிறுவனம் இது குறித்து ஆய்வு முடிவை வெளியிட்டது.
அதில், பிரிட்டன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 55 முதல் 60 சதவீதம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது தவறு என்று கருதுகிறார்கள் என்றும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மீண்டும் ஐரோப்பிய சந்தையில் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.