செய்தியாளர் - ந.பால வெற்றிவேல்
OpenAI-ன் காப்புரிமைக்கு எதிராகப் புகார் அளித்த சுசிர் பாலாஜியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். தன் மகன் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர் என்றும் அவரது மரணத்தில் பல கேள்விகள் இருப்பதாகவும் சுசிர் பாலாஜியின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். சிறுவயதில் மரணித்துள்ள தொழில்நுட்ப ஜாம்பவான் குறித்து பார்க்கலாம்.
26 வயதாகும் இந்த இளைஞர் உலகத்தையே புரட்டி போட்டு வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஒரு ஜாம்பவான். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர். 2020 ஆம் ஆண்டு ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கிய நிறுவனமான ஓபன் ஏ.ஐயில் பணியாற்ற தொடங்கினார். அவரின் அபரிமிதமான திறமை ChatGPT உலகளவில் புகழ் பெற காரணமாக அமைந்தது.
இந்நிலையில்தான், OpenAI நிறுவனம் அமெரிக்க காப்புரிமை சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, அதில் பதில் அளிக்கப்படும் தரவுகள் மற்றொருவரின் சிந்தனை மற்றும் உழைப்பு என தெரிவித்த சுசிர் பாலாஜி, OpenAI இயங்குவது சட்டவிரோதமானது என கூறி OpenAI நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
கல்லூரி காலத்தில் அவர் உருவாக்கிய Scale AI இன்னும் இயங்குதளம் ChatGPT உருவாவதற்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. நிறுவனத்தில் இருந்து அவர் வெளியேறியது தொழில்நுட்ப உலகில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் நவம்பர் 27ஆம் தேதி தனது சான் பிரான்சிஸ்கோ வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டார். நகரின் தலைமை மருத்துவ பரிசோதகரால் இது தற்கொலை என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுசிரின் தாயான பூர்ணிமா ராமராவ் தனது மகன் தற்கொலை செய்யவில்லை என்றும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சுசிர் பாலாஜி OpenAI காப்புரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியதோடு, அதற்கான ஆதாரங்களைத் திரட்டியிருந்தார். அவர் இந்த விவரங்களை வெளியிட முக்கிய ஊடகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், தனது மகன் மர்மமாக இறந்தது சந்தேகத்தை வலுக்க செய்வதாக தெரிவித்துள்ளார். நிறுவனத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தனிப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்ட சுசிர் எந்த தவறும் இதுவரை செய்யவில்லை என்றும் OpenAI நிறுவனத்திற்கு எதிராக விரிவான ஆவணத்தை தயாரித்து வைத்ததாக கூறினார்.
சுசிர் பல நாட்களாக தொடர்புகொள்கவில்லை என்பதால் அவரது பெற்றோர் போலீசுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவரது உடல் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
மரணம் தற்கொலை என அறிவிக்கப்பட்டபோதும், குடும்பத்தினர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். சுசிர் பாலாஜியின் மரணத்திற்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி Google Drive மற்றும் Chrome-ல் பணி கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது கேள்வியை எழுப்பி உள்ளதாக அவரது தாயார் பூர்ணிமா தெரிவித்துள்ளார். சுசிர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியதோடு, விடுமுறையில் மகிழ்ச்சியாக இருந்தார் என்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர் தனது மகன் என்றும் கூறியுள்ளார்.
சுசிர் மிரட்டல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இலக்காக இருந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கும் அவரது குடும்பத்தினர், சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், எலான் மஸ்க் போன்ற பிரபலங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் உள்ளனர்.
அவரது லேப்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் அடங்கிய தகவல்களை ஆராய்ந்து, மரணத்திற்கு காரணமான ஆவணங்களை கண்டறிய குடும்பம் விசாரணை நடத்தி வருகிறது. பாலாஜியின் மரணம் குறித்து மீண்டும் புகார் அளித்துள்ளதாகவும் வழக்கு விசாரணையில் அவர் மரணம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.