ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்புகள் குறித்து பில் கேட்ஸ் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவின் முன் சாட்சியமளித்தார். எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த முக்கியமான தகவல்களை வைத்து தன்னை மிரட்ட முயன்றதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் என உலகின் செல்வாக்குமிக்க மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டில், சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது செல்வாக்கையும் பணத்தையும் பயன்படுத்தி சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அவர் கைது செய்யப்பட்ட சில வாரங்களிலேயே, நியூயார்க் சிறையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தற்கொலை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் உலகளவில் பல மர்மங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியது.
கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க புலனாய்வாளர்கள் எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், தொடர்புப் பட்டியல்கள், விமானப் பயணப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் எனப் பெருமளவிலான தரவுகளைச் சேகரித்தனர். அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த ஆவணங்களின் புதிய தொகுப்பு எப்ஸ்டீன் பைல்ஸ் என்ற பெயரில் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
இந்த கோப்பில் பில் கேட்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக அவர் ஏற்கெனவே மறுத்திருந்த நிலையில், பாலியல் குற்றங்களுக்காக ஜெஃப்ரி தண்டிக்கப்பட்ட பிறகும் 2011இல் அவரை சந்தித்ததாக பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டு பின்னர் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் குழந்தைகள் பாலியல் கடத்தல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனின் கோப்புகளில் பில்கேட்சின் பெயரும் புகைப்படங்களும் பலமுறை இடம்பெற்றுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மேற்பார்வைக் குழுவின் முன் விசாரணைக்காக ஆஜராக கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குழு முன்பு, ஆஜரான பில் கேட்ஸ் உலகளாவிய சுகாதாரப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காகவே எப்ஸ்டீனைத் தான் பயன்படுத்த நினைத்ததாக அவர் மீண்டும் ஒருமுறை விளக்கமளித்துள்ளார். மேலும் எப்ஸ்டீன் பணம் நன்கொடையாக வழங்கப் போவதில்லை என்பதை உணர்ந்த பிறகு, 2014-ஆம் ஆண்டில் அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மெலிண்டா கேட்ஸுடனான தனது திருமணத்தைத் தாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ரகசியத் தகவல்களை பயன்படுத்தி, மீண்டும் தன்னுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள அழுத்தம் கொடுக்க எப்ஸ்டீன் முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், எப்ஸ்டீனின் சட்டவிரோத பாலியல் கடத்தல் தொழிலிலோ அல்லது அவரது தீவில் நடந்த குற்றங்களிலோ தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்றும், அவரது குற்றங்கள் எதுவும் தனக்குத் தெரியாது என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதே நேரத்தில், எப்ஸ்டீன் ஆவணங்களில் கூறப்பட்டிருந்த இரண்டு ரஷ்யப் பெண்களுடனான தனது திருமணத்தை மீறிய உறவை பில் கேட்ஸ் நாடாளுமன்றக் குழுவிடம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தனக்கு பாலியல் நோய் பரவியது போன்ற எப்ஸ்டீனின் மற்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் கூறியுள்ளார்.