’சென்னையின் எப்ஸ்டீன் அவர்..’ பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்.. பாடகி பகீர்!
தமிழ் சினிமாவில் `இஸ்பேட்ராஜா இதயராணி' படத்தில் ஏதே பெண்ணே, `தியா' படத்தில் ஆலாலிலோ, `பேச்சுலர்' படத்தில் காதல் கண்மணி உள்ளிட்ட சில பாடல்களை பாடியவர் ஸ்வாகதா கிருஷ்ணன். பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணனின் சகோதரி தான் இவர். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது "இனிமேல் என்னால் அந்த துறையில் வேலை செய்ய முடியாது என எனக்கு தோன்றியது. நான் மிக கொடுமையான பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவள். உண்மையை சொல்வதென்றால் அந்த ஊரில் (சென்னை) இருந்து தப்பித்து தான் ரிஷிகேஷ் வந்திருக்கிறேன். எனக்கு இது நடந்தபோது வேறுயாருக்கும் இது நிகழக்கூடாது என்பதால் நான் சென்ற ஒரு இசையமைப்பாளரின் ஸ்டுடியோவுக்கு செல்ல வேண்டாம். அவர் தான் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தவர் என பல நண்பர்களுக்கு சொன்னேன். வேறு எங்கும் சொன்னது கிடையாது.
என்னுடைய 9 வருட காதல் பிரேக் அப்பில் முடிந்தது. அப்போது சம்பந்தப்பட்ட அந்த இசையமைப்பாளரிடம் பணியாற்றி வந்தேன். சவுண்ட் இன்ஜினியரிங் முதல் சம்பளம் வாங்கி கொடுப்பது வரை எல்லா வேலைகளையும் செய்தேன். என் காதல் பிரேக் அப் சமயத்தில் என்னை அவர் கண்ட்ரோல் செய்ய துவங்கினார்.
எனக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்தினார், பயண செலவுக்கு மட்டும் பணம் தருவார். நானும் சேர்ந்தது வாங்கிக் கொள்ளலாம் என அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவரும் காசில்லை என புலம்புவார். அது போல அவரது பல செலவுகளுக்கு என்னிடம் கடன் வாங்க துவங்கினார். ஒரு கட்டத்தில் அவரது குடும்பமே சேர்ந்து இதனை செய்கிறார்கள் என இப்போது யோசிக்கையில் புரிந்தது.
இது ஒருநாள் பாலியல் துன்புறுத்தலாக மாறியது. என்னிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டார். எல்லாவற்றையும் சிசிடிவி கேமிராவில் பதிவும் செய்தார். அதை வைத்துக் கொண்டு, இதை வெளியே சொல்லக்கூடாது என என்னை மிரட்டினார். இதை சட்டரீதியில் எதிர்கொள்ள அப்போது எனக்கு தெம்பில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன். இதை பலருக்கும் அவர் செய்திருக்கிறார். சென்னையின் எப்ஸ்டீன் அவர். இப்போதைக்கு நான் அவரது பெயரை சொல்லப்போவதில்லை. மேலும் நடந்தவை எல்லாவற்றையும் முழுமையாகவும் சொல்லவில்லை. ஆனால் கண்டிப்பாக அதற்கான ஒரு நாள் வரும், கண்டிப்பாக அவரது பெயரை நான் சொல்லுவேன். முறைப்படி சட்டரீதியாக இதனை சொல்லவேண்டும்." என்றார் ஸ்வாகதா.

