அமெரிக்க அதிகாரிகளை உளவு பார்த்த இஸ்ரேல்? விரிசலில் ட்ரம்ப் - நெதன்யாகு நட்பு?
அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அதில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள், நகர்வுகளை இஸ்ரேல் உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டுகிறது. இதனால் பென்டகன், இஸ்ரேல் உளவு அச்சுறுத்தலை ‘மிகவும் ஆபத்தானது’ என உயர்த்தி, இரு நாடுகளின் நம்பிக்கை உறவு சீர்குலைந்துள்ளது.
செய்தியாளர்; M.மீரா
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு இடையே மத்திய கிழக்கு விவகாரங்கள், குறிப்பாக ஈரான் மற்றும் லெபனான் மோதல்கள் தொடர்பாக சமீபத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. எரிபொருள் விலையைக் குறைக்க, போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் விரும்புவதாகவும், ஆனால் நெதன்யாகுவோ ஹிஸ்புல்லா மற்றும் ஈரானை முழுமையாக வீழ்த்தும் நோக்கில் செயல்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பேச்சைக் கேட்காமல் ஈரானுடன் மோதலை நீட்டித்தால் இஸ்ரேல் சர்வதேச அரங்கில் தனித்துவிடப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதைத் தவிர நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்றும், ஏனெனில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிடமே உள்ளது என்றும் ட்ரம்ப் தரப்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ’அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல பொதுவான நலன்கள் இருந்தாலும், சில முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளின் இலக்குகளும் முற்றிலும் வேறுபடுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் அணு ஆயுதம் சேருவதைத் தடுப்பது மட்டுமே அமெரிக்காவின் முதன்மை நோக்கம் என்றும், அதற்குப் பேச்சுவார்த்தையே வழி என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசோ, ஈரானை முழுமையாக ராணுவ ரீதியாக ஒடுக்க நினைப்பதாக வான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பேச்சுகளுக்குப் பின்னால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், ஈரானுடன் ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், அதில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளை இஸ்ரேல் உளவு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff), பென்டகன் கொள்கை தலைவர் எல்ப்ரிட்ஜ் கோல்பி (Elbridge Colby) உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தையாளர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் நகர்வுகளை இஸ்ரேல் உளவு பார்த்துள்ளது.
இந்த விவகாரம் வாஷிங்டன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இஸ்ரேல் மீதான உளவுத்துறை அச்சுறுத்தல் அளவை பென்டகன் (அமெரிக்கா) ‘மிகவும் ஆபத்தானது’ (Critical) என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. ஆனால் அமெரிக்க அரசாங்கம் இந்த அறிக்கைகளை மறுத்துள்ளது; இஸ்ரேல் அவற்றை முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளது.
இந்த உளவு சம்பவத்துக்குப் பின் இஸ்ரேல் மீது இராஜதந்திர ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளை ட்ரம்ப் தேடிக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
நவம்பரில் நடைபெற இருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு பின் இஸ்ரேலுக்கான இராணுவ உதவியைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் இப்போது குண்டுவீச்சுகளை நிறுத்தவும், தெற்கு லெபனானிலிருந்து படைகளைத் திரும்பப் பெறவும் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு அமெரிக்க அதிபருக்குக் கிடைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

