ஈரான் குறைந்த விலை ட்ரோன்களை பயன்படுத்தி, உலகளாவிய பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, அமெரிக்க நட்பு நாடுகளின் மீது பொருளாதாரச் செலவுகளைச் சுமத்துகிறது. இதனால், அமெரிக்கா உக்ரைனின் உதவியை நாடியுள்ளது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா-உக்ரைன் போரில் ஒரு மாதகால போர்நிறுத்தத்தை ஏற்படுத்தினால், ஈரானிய ட்ரோன்களை எதிர்க்க உதவுவதாக உறுதியளித்துள்ளார்.
உலகளாவிய வர்த்தகத்தைச் சீர்குலைத்து வாஷிங்டனுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் துருக்கி, சைப்ரஸ் மற்றும் அஜர்பைஜான் உட்பட குறைந்தது 11 நாடுகள் மீது குறைந்த விலை ட்ரோன் தாக்குதல்கள் மூலம் ஈரான் போரை விரிவுபடுத்துகிறது. ஈரானின் மேம்பட்ட ஏவுகணை ஆயுதக் கிடங்கு குறைந்துவரும் நிலையில், பிராந்திய அச்சுறுத்தல்களைத் தாங்கவும், அமெரிக்க நட்பு நாடுகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் மீது குறிப்பிடத்தக்க செலவுகளை சுமத்தவும் போதுமான ட்ரோன்கள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளை ஈரான் வைத்திருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
‘குறைவான ஷாட்கள், அதிக இலக்குகள்’ என்பது ஈரானின் ஓர் உத்தியாகும். இதன்மூலம், மத்திய கிழக்கு முழுவதும் குறைந்த விலை, தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களைப் பயன்படுத்தி மோதலை விரிவுபடுத்துவதே அதன் நோக்கமாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஈரானின் மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை இருப்புகள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் குறைந்தது 11 நாடுகளை குறிவைப்பதன்மூலம் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் உட்பட ஈரான் அமெரிக்க நட்பு நாடுகளின் மீது பொருளாதாரச் செலவுகளைச் சுமத்தவும், உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈரான் பயன்படுத்தும் மலிவான ட்ரோன்களை (தோராயமாக $20,000–$50,000 (ரூபாய் 45லட்சம் ) அழிக்க (அமெரிக்கா ) பயன்படுத்தும் பேட்ரியாட் ஏவுகணையின் விலை $4 மில்லியன் (25 கோடி ரூபாய்க்கு மேல்) ஆகும். இது அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.
முக்கிய விமான நிலையங்கள் (துபாய் இன்டர்நேஷனல் போன்றவை) மற்றும் எரிசக்தி மையங்கள் (சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் போன்றவை) மீதான ஈரான் தாக்குதல்கள் இஸ்ரேலுக்கு அப்பால் போரின் அபாயங்களைப் பரப்புவதற்காக நடத்தப்பட்டது என்று வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவது, அமெரிக்காவுக்கு பொருளாதாரரீதியாக இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அமெரிக்கா பயன்படுத்தும் கோயோட் ட்ரோன் எதிர்ப்பு ட்ரோனின் மதிப்பும், 1 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளது. ட்ரோன்களை வீழ்த்துவதற்கான பிற தொழில்நுட்பங்களின் செயல் திறன் பெரிய அளவில் இல்லாததால், இந்த விவகாரத்தில் உக்ரைனின் உதவியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாடியிருந்தார்.
இந்த நிலையில், ட்ரோன்களை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு உதவ தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் ஒருமாத கால போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடினை ஒப்புக்கொள்ளும்படி, அங்குள்ள தலைவர்கள் சமாதானப்படுத்தினால், ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதில் தனது சிறந்த நிபுணர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புகிறோம். ரஷ்யா - உக்ரைன் போரின் நான்கு ஆண்டுகள், ட்ரோன்களை இடைமறித்து தாக்குவதில் Kyiv தனித்துவமான நிபுணத்துவத்தை வளர்த்துக் கொண்டுள்ளது. அவற்றில் பல ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்கள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார் .
மேலும் அவர், “மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபருடன் நல்லுறவைக் கொண்டுள்ளனர். அவர்கள் ஒருமாத கால போர்நிறுத்தத்தை செயல்படுத்த ரஷ்யர்களைக் கேட்கலாம். அதன்படி போர்நிறுத்தம் அமலுக்கு வந்தவுடன், நாங்கள் எங்களிடம் இருக்கும் சிறந்த ட்ரோன் நிபுணர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவோம்" என தெரிவித்துள்ளார் .