தொடர் தாக்குதல் |தனித்துவிடப்பட்ட ஈரான்.. நட்பு நாடுகள் விலகி நிற்பது ஏன்?
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானின் நட்பு நாடுகள் கண்டனம் தெரிவிப்பது போன்ற சம்பிரதாயமான எதிர்வினைகளை ஆற்றியதைத் தாண்டி எதுவும் செய்யவில்லை. இந்த மோதலில் ஈரான் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தின. தற்போது அஜர்பைஜான் நாட்டின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. தவிர, தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனவும், நீண்ட நாட்கள் தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானின் நட்பு நாடுகள் கண்டனம் தெரிவிப்பது போன்ற சம்பிரதாயமான எதிர்வினைகளை ஆற்றியதைத் தாண்டி எதுவும் செய்யவில்லை. இந்த மோதலில் ஈரான் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டுள்ளது.
நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு போன்ற துறைகளில் உதவுவதைவிட ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற ஆயுதமேந்திய படைகளை வளர்த்துவிடுவதில் ஈரான் கவனம் செலுத்தியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் இப்போது இந்தப் படைகள் வலுவிழந்துள்ளன இந்தியா தனது பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களுக்காக ஈரானை ஒரு முக்கியப் பங்காளியாகக் கருதியது. அதேநேரம், இந்தியா இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத வாடிக்கையாளராகவும் இருக்கிறது. மேலும் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதே தற்போது இந்தியாவின் வெளியுறவு அணுகுமுறையாக இருந்துவருகிறது.
சீனா, ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தாலும், அமெரிக்காவுடன் நேரடி மோதலைத் தவிர்க்கவே விரும்புகிறது. ரஷ்யா ராணுவ ரீதியாக ஈரானுடன் நெருக்கமாக இருந்தாலும், இஸ்ரேலுடனான தனது உறவைச் சிக்கலாக்கிக்கொள்ள விரும்பவில்லை. எனவே ஈரானுக்கு வழக்கமான சில ராணுவ உதவிகளை வழங்குவதைத் தாண்டி வேறு எதையும் செய்ய ரஷ்யா தயாராக இல்லை. ஈரானின் வெளியுறவுக் கொள்கையாலும் அதன் நட்பு நாடுகள் தங்களது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாலும் இந்தப் மோதலில் ஈரான் தனித்துவிடப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

