தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு Pt web
தமிழ்நாடு

தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு.. நடந்தது என்ன.? வெளியானது சிசிடிவி காட்சிகள்.!

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது.

Premkumar S

திருச்சி ஸ்ரீரங்கம் பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்ட தவெக தேர்தல் அலுவலகம் மீது ஏப்ரல் 30 நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். பேனர்கள் கத்தியால் கிழிக்கப்பட்டு அலுவலகம் தீவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வேட்பாளர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பனியன் அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தீ வைப்பு செய்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில், தவெக தேர்தல் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சூழலில் தான், ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், தேர்தல் அலுவலகத்தில் உள்ள பேனர்களை கத்தியால் கிழித்தும், அலுவலத்தை தீயிட்டு கொளுத்தியிருந்தனர். ஸ்ரீரங்கம் தவெக வேட்பாளர் ரமேஷ், இந்த சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதி தவெக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிப்பு

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் தான், 2 பேர் அலுவலகத்தை தீயிட்டு எரித்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சிசிடிவி காட்சிகளில், தமிழக வெற்றி கழகம் அலுவலகம் அருகில் பனியன் அணிந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தசூழலில் தான், இருசக்கர வாகனத்தில் வந்தது யார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவி வருகிறது. கடந்த, ஏப்ரல் 29-ம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறி வருகின்றன.

அரசியல் கட்சித் தலைவர்கள்

அதேபோல, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒரு சில கருத்துக் கணிப்புகளும், தவெகவுக்கு ஒரு சில கருத்துக் கணிப்புகளும் சாதகமாக வந்துள்ளன. எனினும், தமிழ்நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? என்பது நாளை மறுநாள் தெரியவரும். முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி எனக் கூறிவந்த வேளையில், வாக்குப்பதிவுக்கு பிறகு, அது பெரும்பாலான இடங்களில் எதிரொலித்திருப்பதாக பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு நாளின் போது கூட, பெரும்பாலான இடங்களில் தவெக மற்றும் திமுகவினர் மோதல் ஏற்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த சில நிமிடங்களிலேயே, துறைமுகம் தொகுதியில், திமுக வேட்பாளர் சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, தவெக துறைமுகம் தொகுதி வேட்பாளர் சினோரா அசோக், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக கூறிவந்த வேளையில், அவருக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான், நேற்று தவெக தலைமை தேர்தல் அலுவலகம், இரண்டு மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.