மதுரை திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகையன்று பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டி, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கைதான நிலையில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திடீர்நகர் குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் எஸ்.ஐ. ஜெயபாண்டி வயது 58. கடந்த மாதம் 16ம் தேதி திருக்கார்த்திகையன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த 14 வயது சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் கழிப்பறைக்கு சிறுமி சென்றபோது ஜெயபாண்டியும் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அழுது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் உடனே ‘சைல்டு லைனுக்கு’ தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்தனர். உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் 4 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதைதொடர்ந்து ஜெயபாண்டியை கமிஷனர் லோகநாதன் ‘சஸ்பெண்ட்’ செய்தார்.
இந்நிலையில் ஜெயபாண்டி போன்றோரால் போலீஸ் துறைக்கு களங்கம் என்றாலும் மற்ற போலீசாருக்கு எச்சரிக்கும் விதத்திலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது குறித்து தெரிவிக்காமல் உயர்அதிகாரிகளின் உத்தரவுபடி போலீசார் ரகசியம் காத்து வந்துள்ளனர்.
இச்சூழலில்தான் அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் சீண்டல் விவகாரம் தமிழக அளவில் விஸ்வரூபம் எடுத்ததால், ஜெயபாண்டி விவகாரம் குறித்து பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமைதிகாத்த சம்பந்தப்பட்ட போலீசார் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவார்கள் என வாய்மொழியாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.