வீகே.குருசாமி pt desk
தமிழ்நாடு

மதுரை | பகைவர்களான நண்பர்கள்... 22 ஆண்டுகளில் அடுத்தடுத்து அரங்கேறிய 21 கொலைகள் - நடந்தது என்ன?

மதுரையில் 22 ஆண்டுகளாக அதிகரிக்கும் பகை... தொடரும் 21 கொலைகள் - நட்பு மற்றும் பகையால் போன அப்பாவி உயிர்கள் நடந்தது என்ன விரிவாக பார்க்கலாம்.....

PT WEB

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்றிரவு காளீஸ்வரன் என்ற கிளாமர் கார்த்திக் (32) மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு முன்னாள் இருக்கும் பல கொலை சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவைச் சேர்ந்தவர்கள் வீகே.குருசாமி மற்றும் ராஜபாண்டி. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு உறவினர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் வீ.கே.குருசாமியும், ராஜபாண்டியும் சிறு வயதிலேயே குடும்பத்தோடு மதுரைக்கு வந்து விட்டனர். இதையடுத்து மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியில் வீகே குருசாமி வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் 3 மகள்களும் இருந்த நிலையில், 4 பேருக்கும் திருமணமாகியுள்ளது.

பகைவர்களான நண்பர்கள்:

இந்நிலையில் வீ.கே.குருசாமியும், ராஜபாண்டியனும் அரசியலுக்கு வர தொடங்கினர். இதனால் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது சிறிய சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பு மோதலாக மாறியது. இதையடுத்து ராஜாபாண்டிக்கு உதவியாக இருந்த அவரது அண்ணன் மகன் சின்ன முனீஸ் என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு வீ.கே.குருசாமி தரப்பு அரசியல் ரீதியான கொலை செய்துள்ளனர். இதில் பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமூர்த்தி, வழுக்கை முனீஸ், வீ.கே.குருசாமி, கணுக்கன் முனியசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தான் இந்த தொடர் கொலைக்கான தொடர்ச்சியாக அமைந்தது

இருதரப்பிலும் அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள்:

இதனை தொடர்ந்து 2006 மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராக வீ.கே.குருசாமி தேர்வானார். இதனையடுத்து 2008 ஆம் ஆண்டு சின்ன முனிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய வழுக்கை முனிஸை - ராஜாபாண்டியின் உறவினரான சப்பாணி முருகன் கொலை செய்தார். இதையடுத்து கொலை செய்யப்பட்ட சின்ன முனிஸின் தம்பி வெள்ளை காளி கடந்த 2008 ஆம் ஆண்டு மாரிமுத்து, ராமமூர்த்தி ஆகிய இருவரையும் வில்லாபுரம் பகுதயில் வைத்து இரட்டை கொலை செய்கிறார்.

சிறை, ஜாமீன், கொலை:

இதனைத் தொடர்ந்து வெள்ளை காளி மற்றும் சகுனி கார்த்திக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, முத்து இருளாண்டி என்பவருடன் நட்பு ஏற்படுகிறது. இதனையடுத்து மூவரும் ஜாமினில் வெளியே வந்து கடந்த 2013ஆம் ஆண்டு வி.கே குருசாமியின் தங்கை கணவரான பாம்பு பாண்டியை கொலை செய்த வழக்கில் மூவரும் கைதாகினர். இதனால் ஆத்திரமடைந்த வீ.கே.குருசாமி தரப்பு சகுனி கார்த்தியின் தாய் மாமனான மயில் முருகன் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்தனர். இதில் வீ.கே.குருசாமியின் மகன் மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பழிக்குப் பழியாக நிகழ்ந்த கொலை சம்பவங்கள்:

இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வீ.கே.மணியின் நண்பர் குப்பு என்ற முனியசாமியை வெள்ளை காளி மற்றும் ராஜபாண்டியின் மகனான தொப்பிலி முனியசாமி ஆகியோர் சேர்ந்து படுகொலை செய்தனர். இதில் காளி, தொப்பிலி முனியசாமி உள்ளிட்டோர கைது செய்யப்பட்டு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனையடுத்து பகையின் தொடர்ச்சியாக கடந்த 2016 ஆம் ஆண்டு காளி தரப்பினர் கமுதி அருகே வி.கே.குருசாமி மகளின் கணவரான எம்.எஸ்.பாண்டியன் தம்பி காட்டு ராஜா என்பவரை வெட்டிப் படுகலை செய்துவிட்டு காவல்துறையினரிடம் சரண் அடைந்தனர்.

காவல் துறையினர் என்கவுண்டர்:

இதனையடுத்து வி.கே.குருசாமியின் மகனான மணி, கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜபாண்டியனின் மகனான தொப்பிலி முனுசாமியை கடத்திச் சென்று பைக்குடன் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார். இதனை தொடர்ந்து வி.கே..குருசாமியின் ஆதரவாளரான சடையாண்டி கொல்லப்பட்டார். இந்நிலையில் மாயக்கண்ணன் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது இருவரையும் காவல்துறையினர் என்கவுண்டர் செய்து கொன்றனர்.

இவருக்கு பதிலாக அவரை வெட்டிய கொடூரம்:

இதற்கு பழிவாங்கும் நோக்கில் வீகே.குருசாமியின் மருமகன் எம்எஸ்.பாண்டி என நினைத்து ரேசன் கடையில் பணியில் இருந்த எம்.எஸ்.பாண்டியன் உறவினரான முனியசாமி கொலை. வீ.கே.குருசாமியின் மருமகன் எம்.எஸ்.பாண்டி கெலை. இதனை தொடர்ந்து வெள்ளைக்காளி தரப்பான குல்லா என்ற முத்துப்பாண்டியை கடந்த 2020 ஜூலை மாதம் குருசாமி தரப்பினர் கொலை செய்தனர். இதில் மாடு மணி என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து குருசாமி தரப்பான வகுத்தாலை மணியின் நண்பரான முருகானந்தம் என்பவரை காளி தரப்பினர் கொலை செய்தனர்.

தொடரும் கொலை சம்பவங்கள்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் ராஜாபாண்டி உயிரிழந்த நிலையில், இவர் (அதிமுகவின்) மண்டலத் தலைவராக 2011 ஆம் ஆண்டில் இருந்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீகே.குருசாமி, ராஜபாண்டி ஆகிய இரு தரப்பினரும் கூலிப்படையை வைத்து கொலை சம்பவங்கள் நடத்தாமல் தங்களுடைய உறவினர்கள் மூலமே பழிக்குப் பழி வாங்கும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 22 ஆண்டுகால பகையின் நீட்சியாக விகே.குருசாமியின் சகோதரி மகனான காளீஸ்வரன் என்ற கிளாமர் கார்த்திக் (32) மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்

காளீஸ்வரன் கொலை, இரண்டு தனிப்படைகள் அமைப்பு:

இதையடுத்து அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையுண்ட காளீஸ்வரன் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்க சிறைச்சாலையில் இருந்தபடியே வெள்ளை காளி தரப்பினர் திட்டமிட்டு காளீஸ்வரனை கொலை செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் மீண்டும் விகே.குருசாமி மற்றும் வெள்ளை காளி தரப்பினரிடையே கொலை சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..