Rinku Singh web
கிரிக்கெட்

’உன் கனவு நிஜமாகிடுச்சு அப்பா.. ஆனா நீ இல்லையே..’ - ரிங்கு சிங் எமோசனல் போஸ்ட்!

இந்தியாவிற்காக உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்ற தந்தையை கனவை நிறைவேற்றிய பிறகு, ரிங்கு சிங் மறைந்த அப்பாவிற்காக உணர்ச்சிபெருக்கான சில வார்த்தைகளை எழுதியுள்ளார்.

Rishan Vengai

ரிங்கு சிங் தனது தந்தையின் மறைவுக்குப் பின் முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். தந்தையின் கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன், அவரின் இல்லாத வெற்றிடம் வாட்டுவதாக உணர்ச்சியுடன் கூறியுள்ளார். தந்தையின் ஆதரவால் கிரிக்கெட்டில் முன்னேறிய ரிங்கு, உலகக்கோப்பையை தந்தைக்கு அர்ப்பணித்துள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற லட்சியம் இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணத்தை கொடுத்துள்ளது. இந்தியாவின் ஃபினிசிங் வீரர் ரிங்கு சிங், இறுதிப்போட்டிக்கு முன்னதாக தன்னுடைய தந்தையை இழந்தபிறகும் அணிக்காக மீண்டும் உலகக்கோப்பைக்கு திரும்பினார். அதேபோலவே மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷனும் இறுதிப்போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய சகோதரியை இழந்தபோதும், நாட்டிற்காக விளையாட அணிக்கு திரும்பினார்.

இந்த இரண்டு வீரர்களும் தங்களுடைய வெற்றியை, இந்தியாவிற்காக வென்ற உலகக்கோப்பையை தங்களுடைய மறைந்த தந்தைக்கும், சகோதரிக்கும் அர்ப்பணித்துள்ளனர்.

அந்தவகையில் தன்னுடைய தந்தை மறைவுக்கு பின் முதன்முறையாக பேசியிருக்கும் ரிங்கு சிங், வாழ்வில் கஷ்டப்பட்டு தன்னை உயர்த்திய தந்தையின் கனவை நிறைவேற்றியபோதும், அவரில்லாத வெற்றிடம் வாட்டுவதாக உணர்ச்சியுடன் கூறியுள்ளார்.

புற்றுநோயுடன் போராடி இறந்த தந்தை..

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரிங்கு சிங், கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்தவர். ஏழ்மையில் கிரிக்கெட்டை நேசித்த ரிங்கு சிங்குவை முதலில் அப்பா அடித்தாலும், பின்னர் அவரின் கனவிற்காக ஆதரவாக நின்றார். இருப்பினும் தந்தையின் குடும்ப பாரத்தை கொஞ்சமாவது தாங்கவேண்டும் என நினைத்த ரிங்கு சிங், தந்தைக்கு உதவியாக சிலிண்டர் விநியோகிக்கும் வேலை உட்பட, ஆரம்பத்தில் துப்புரவு பணிகளை கூட செய்துள்ளார்.

Rinku Singh Parents

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஒரு ஹீரோ நாக் விளையாடி அடையாளம் பெற்ற ரிங்கு சிங், தற்போது கிரிக்கெட் உலகில் நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் கிரிக்கெட்டில் முன்னேறிய பிறகு அவருடைய குடும்பம் நல்ல நிலைக்கு வந்தாலும், 30 ஆண்டுகளாக கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் வேலையை செய்துவந்த அவரின் தந்தை கான்சந்த் சிங் தொடர்ந்து அதேவேலையை செய்துவந்தார்.

ஆனால் கல்லீரல் புற்றுநோயுடன் போராடிய அவர், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் மரணித்தார். தன்னுடைய தந்தையின் இறப்பின் இறுதிசடங்கை முடிந்த ரிங்கு சிங், மறுநாளே இந்திய அணியுடன் உலகக்கோப்பையில் மீண்டும் இணைந்தார்.

உன்னை எப்போதும் மிஸ் செய்வேன் அப்பா..

இந்தசூழலில் 2026 டி20 உலகக்கோப்பை வென்று உலகசாம்பியனாக மாறிய ரிங்கு சிங், தன்னுடைய தந்தையின் கனவு நிறைவேறிய பிறகு முதன்முதலாக மனம்திறந்து பேசியுள்ளார்.

தந்தை இல்லாத வெற்றிடம் எப்போதும் போகாது என எழுதியிருக்கும் ரிங்கு சிங், “இத்தனை நாட்கள் உன்னிடம் பேசாமல் கடந்ததில்லை. நீ இல்லாமல் இனி வரும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை... ஆனால் ஒவ்வொரு அடியிலும் எனக்கு நீ வேண்டும்..

கடமை எல்லாவற்றிற்கும் முன் வரும் என்பதை நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்... அதனால் களத்தில் நான் உங்கள் கனவை மட்டுமே நிறைவேற்ற முயற்சித்தேன். இப்போது உங்கள் கனவு நனவாகியுள்ளது... நீங்கள் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பெரியதோ, சிறியதோ, ஒவ்வொரு சந்தோஷத்திலும் நீ இல்லாததை நான் உணர்வேன். நான் உன்னை மிகவும் மிஸ் செய்வேன் அப்பா... மிகவும் அதிகம்” என எமோசனலாக எழுதியுள்ளார்.