2026 ஐபிஎல் அப்டேட் web
கிரிக்கெட்

2026 ஐபிஎல் | தேர்தலால் தள்ளிப்போகிறதா..? தேதி அறிவிப்பு..? RCB-க்கு குட் நியூஸ்!

தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால், அட்டவணை அறிவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரானது ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட் பிரச்னை மற்றும் தேர்தல் தேதிகள் காரணமாக அட்டவணை இறுதிசெய்வதில் சிக்கல் தொடர்கிறது. மார்ச் மாதம் இறுதியில் 2026 ஐபிஎல் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

17 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி அணி வரலாறு படைத்தது. அந்த கையோடு வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏற்பாடு செய்திருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இப்படி ஒரு மோசமான நிகழ்விற்கு பிறகு 2026 ஐபிஎல் தொடருக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாமலே இருந்துவருகிறது.

RCB IPL Champion

2026 ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல்கள், ஆர்சிபி அணிக்காக ஹோம் கிரவுண்ட் பிரச்னை மற்றும் ராஜஸ்தான் அணிக்கான ஹோம் கிரவுண்ட் பிரச்னைகள் என பல விசயங்கள் முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றன.

இந்தசூழலில் தான் 2026 ஐபிஎல் தொடருக்கான அப்டேட் வெளியாகியுள்ளது.

2026 ஐபிஎல் எப்போது தொடக்கம்..?

கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் தகவலின் படி, 2026 ஐபிஎல் தொடரானது மார்ச் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு இறுதிப்போட்டியானது மே 31ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் நிர்வாகம் முன்னர் அறிவித்த மார்ச் 26 தொடக்க தேதியை விட 2 நாட்கள் தாமதமான அறிவிப்பாகும்.

இறுதிசெய்யப்படும் அட்டவணை மற்றும் ஆர்சி அணிக்கான ஹோம் கிரவுண்ட் பிரச்னை குறித்து முடிவெடுக்க விரைவில் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி அணி தொடக்க போட்டியில் விளையாடும் என்பதால், ஆர்சிபி அணியின் விளையாட்டு மைதானங்கள் இறுதிசெய்யப்படவேண்டியது முதற்கட்ட வேலையாக பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ, ஐபிஎல்

கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஆர்சிபி அணியின் 7 உள்ளூர் போட்டிகள் அதே இடத்தில் நடத்தப்படுமா அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்பது குறித்து ஆர்சிபி நிர்வாகம் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் போட்டியை வெளியே கொண்டுசெல்லாமல் சொந்த மண்ணில் நடத்தவே முயற்சி எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹோம் போட்டிகளின் எண்ணிக்கை குவகாத்தியில் அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடரை தேர்தல் பாதிக்குமா..?

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, 2009, 2014, 2019 மற்றும் 2024 முதலிய ஆண்டுகளில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றபோதெல்லாம், ஐபிஎல் தொடரின் தேதி அட்டவணை இரண்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2025 Captains

இந்தசூழலில் இந்த முறையும் அதே திட்டத்தை செயல்படுத்துமா அல்லது இந்திய தேர்தல் ஆணையம் முதலில் மூன்று மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.