இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் அனில் கும்ப்ளே பெயரை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் என்ற பெயருக்கும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இடமிருக்கிறது.
சொல்லப்போனால் அனில் கும்ப்ளேவின் பல்வேறு சாதனைகளை உடைத்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், 37 முறை 5 விக்கெட்டுகள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகள், அதிவேகமாக 350 டெஸ்ட் விக்கெட்டுகள் என பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து ஒரு ஜாம்பவான் கிரிக்கெட்டராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
இந்தியாவிற்காக டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளையும், ஒட்டுமொத்தமாக 765 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கும் அஸ்வின், தன்னுடைய ஓய்வை யாரும் எதிர்ப்பார்க்காதவகையில் திடீரென அறிவித்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், சக கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஓய்வுபெற்ற சுழற்பந்துவீச்சு ஜாம்பவானின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் பிரதமர் மோடி அஸ்வினுக்கு தனிப்பட்ட முறையில் இதயப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஒருவராக உருவெடுத்தது முதல் தனிப்பட்ட தியாகங்கள் வரை, விளையாட்டுக்காகவும் தனது நாட்டிற்காகவும் அவர் செய்த அனைத்திற்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த இதயப்பூர்வமான கடிதத்தில், ”இக்கடிதம் உங்களுக்கு சிறந்த உற்சாகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு என்ற உங்களுடைய அறிவிப்பானது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. உங்களிடமிருந்து இன்னும் பல ஆஃப்-பிரேக்குகளை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், நீங்கள் கேரம் பந்தை வீசி அனைவரையும் போல்டாக்கிவிட்டீர்கள். இருப்பினும், இது உங்களுக்கும் கடினமான முடிவாக இருந்திருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள், குறிப்பாக நீங்கள் இந்தியாவுக்காக விளையாடிய சிறந்த வாழ்க்கைக்குப் பிறகு.
புத்திசாலித்தனம், கடின உழைப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுடைய அனைத்து முக்கியத்துவங்களையும் கடந்து அணிக்கு முதலில் முன்னுரிமை கொடுத்தது என அனைத்திற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: “துப்பாக்கிய பிடிங்க வஷி...” அடுத்த வேட்டையனை சுட்டிக்காட்டும் அஸ்வின்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நீங்கள் விடைபெற்றபிறகு, ஜெர்சி எண் 99 களத்தில் மிகவும் தவறவிடப்படும். நீங்கள் பந்துவீசுவதற்கு கிரீஸில் இருந்தபோது அவர்கள் உணர்ந்த எதிர்பார்ப்பு உணர்வை கிரிக்கெட் பிரியர்கள் இழக்க நேரிடும் - நீங்கள் எதிரணியைச் சுற்றி ஒரு வலையைப் பின்னுகிறீர்கள் என்ற உணர்வு எப்போதும் இருந்தது, அது எதிரணி வீரர்களை எந்த நேரத்திலும் சிக்க வைக்கும். எந்த தருணத்திற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நல்ல ஆஃப்-ஸ்பின் மற்றும் புதுப்புது வேரியேசன்கள் மூலம் பேட்ஸ்மேன்களை மிஞ்சும் அசாத்திய திறமையை நீங்கள் பெற்றிருந்தீர்கள்.
அனைத்து வடிவங்களிலும் நீங்கள் வீழ்த்திய 765 சர்வதேச விக்கெட்டுகள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தது. டெஸ்ட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றவர் என்ற சாதனையை வைத்திருப்பது, கடந்த பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியில் நீங்கள் ஏற்படுத்திய தவிர்க்க முடியாத தாக்கத்தைக் காட்டுகிறது.
ஒரு இளம் திறமையாக, அறிமுக டெஸ்ட்டிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, 2011ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்தீர்கள். 2013 சாம்பியன்ஸ் டிராபியின் கடைசி ஓவரில் நீங்கள் அணியை வெற்றிபெறச் செய்த நேரத்தில், நீங்கள் அணியின் முக்கிய உறுப்பினராகிவிட்டீர்கள். பின்னர், நீங்கள் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பல வெற்றிகள் மூலம் அணியில் மூத்தவராக முக்கிய பங்கு வகித்தீர்கள். ஐசிசியின் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற நீங்கள், சர்வதேச அங்கீகாரம் மற்றும் உலகளாவிய மரியாதையையும் பெற்றுள்ளீர்கள்.
ஒரே போட்டியில் பலமுறை சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உங்களின் ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். 2021-ல் சிட்னியில் நடந்த துணிச்சலான மேட்ச்-சேவிங் இன்னிங்ஸ் உட்பட பல நினைவுகளை நீங்கள் தேசத்திற்கு வழங்கியுள்ளீர்கள்.
கிரிக்கெட்டர்கள் பொதுவாக அவர்கள் விளையாடிய சில அற்புதமான ஷாட்களுக்காக மக்களால் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தான் 2022-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் புகழ்பெற்ற போட்டியில் பந்தை அடிக்காமல் விட்டதற்காக நினைவுகூரப்படும் தனிச்சிறப்பை பெற்றுள்ளீர்கள். அந்தப்போட்டியில் உங்களுடைய வின்னிங் ஷாட் அதிகப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, ஆனால் அதற்குமுன் நீங்கள் பந்தை அடிக்காமல் விட்ட விதம், அதை வைட் பந்தாக மாற்றுவதற்கு அனுமதித்தது, உங்கள் மனதின் திடத்தை காட்டியது.
இக்கட்டான தருணங்களில் கூட, உங்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பே எப்போதும் முன்னிலை பெற்றுள்ளது. உங்கள் தாயார் மருத்துவமனையில் இருந்தபோதும் கூட அணிக்கு பங்களிக்க நீங்கள் திரும்பிய விதம் மற்றும் சென்னையில் வெள்ளத்தின் போது உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாதபோதும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நீங்கள் விளையாடிய நேரத்தை நாங்கள் அனைவரும் எப்போதும் நினைவில் கொள்கிறோம்.
ஒருவர் உங்கள் தொழில் வாழ்க்கையை கவனிக்கும்போது, உங்கள் நெகிழ்வுத்தன்மையும், தகவமைப்புத் தன்மையும் தனித்து நிற்கின்றன. விளையாட்டின் பல்வேறு வடிவங்களுக்கு ஏற்ப உங்கள் அணுகுமுறையை நீங்கள் வடிவமைத்த விதம் இந்திய அணிக்கு ஒரு சொத்தாக இருந்தது. ஒரு பொறியியலாளராக நீங்கள் பெற்ற கல்வி, நீங்கள் பிரபலமாக இருக்கும் நுட்பமான மற்றும் கூர்மையான அணுகுமுறையில் உங்களுக்கு உதவியதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உங்களின் கூர்மையான கிரிக்கெட் மூளையை பல ஆய்வாளர்கள் மற்றும் சக வீரர்கள் பாராட்டியுள்ளனர். இதுபோன்ற அறிவு எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் உரையாடல்களில் நீங்கள் கொண்டு வரும் புத்திசாலித்தனம் மற்றும் அரவணைப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. கிரிக்கெட், விளையாட்டு மற்றும் பொதுவான வாழ்க்கை பற்றிய 'குட்டி ஸ்டோரிஸ்'-ஐ தொடர்ந்து பதிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விளையாட்டின் தூதராக நீங்கள் நாட்டையும் உங்கள் குடும்பத்தையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் பெற்றோர், உங்கள் மனைவி ப்ரீத்தி மற்றும் உங்கள் மகள்களையும் வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன். அவர்களின் தியாகம் மற்றும் ஆதரவு, ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும் உங்கள் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இதற்குபிறகு நீங்கள் அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
நிச்சயம் நீங்கள் மிகவும் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்களிப்பதற்கான வழிகளைக் கண்டறிவீர்கள்.
மீண்டும் ஒருமுறை, ஒரு சிறந்த வாழ்க்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.