"எனக்கும் அஸ்வினுக்கும் பிரச்னையா..?" உடைத்துப் பேசிய ஹர்பஜன் சிங்! ஆனாலும் ஒரு டிவிஸ்ட்!
இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் பெயர்களை தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் என்ற பெயருக்கும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய இடமிருக்கிறது.
இந்தப்பட்டியலில் இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள், அதிக ஓவர்ஆல் விக்கெட்டுகள் என வீழ்த்தி இரண்டாவது இடத்திலிருந்த ஹர்பஜன் சிங்கின் சாதனைகளை கடந்த ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளேவிற்கு அடுத்த சிறந்த சுழற்பந்துவீச்சாளராக புள்ளிவிவரத்தின் அடிப்படையில் உச்சம் தொட்டுள்ளார்.
இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்:
அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 537 விக்கெட்டுகள்
கபில்தேவ் - 434 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் - 417 விக்கெட்டுகள்
இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் (மொத்தமாக):
அனில் கும்ப்ளே - 953 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 765 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் - 707 விக்கெட்டுகள்
இந்நிலையில் தற்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான சர்ச்சை கருத்துகள், செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஹர்பஜன்..
அஸ்வின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தும்போதோ அல்லது சில சாதனைகளை படைக்கும்போதோ, எங்களுக்கும் தொடர்ந்து இதுபோலான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் அஸ்வினை விட சிறப்பாக செயல்பட்டிருப்போம் என்றும், சுழற்பந்துவீச்சில் எளிதில் விக்கெட் விழும் ஆடுகளங்களை இந்திய கொண்டிருப்பதால் அஸ்வினால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது என்று கருத்துகளை ஹர்பஜன் சிங் இதற்கு முன்வைத்துள்ளார்.
அதேபோல சுலபமான ஸ்பின் பிட்களில் வீசி அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், ஸ்பின் அல்லாத ஆடுகளங்களில் அஸ்வினால் விக்கெட் வீழ்த்துவது கடினமாக இருக்கும் என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
இந்நிலையில் அஸ்வின் உடனான சர்ச்சை செய்திகள் குறித்து விளக்கமளித்திருக்கும் ஹர்பஜன் சிங், “சமூக வலைதளங்களை எனக்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். எனக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடோ அல்லது சண்டையோ இருந்தால், என்ன பிரச்சினை என்று அவரிடமே நேரடியாகக் கேட்டு விடக்கூடியவன் நான்.
ஆனால் பொதுவெளிகளில் மற்றவர்கள் எல்லாம் பேசுவது போலவோ, எழுதுவது போலவோ எங்களுக்குள் எதுவும் இல்லை. இனியும் அப்படி இருக்காது. அவருக்கு என்ன கிடைக்கவேண்டுமே அதை அஸ்வின் பெற்றுள்ளார், அதேபோல எனக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை நான் பெற்றுள்ளேன், இதுதான் விதி. இந்தியாவின் மிகச் சிறந்த பவுலர் அஸ்வின். அவரது சாதனைகளுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
மேலும் சர்ச்சைகள் சார்ந்த அவருடைய பார்வை குறித்து பேசிய அவர், “ட்விட்டரில் சில பேர் எங்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாக திரித்துக் கூறுகின்றனர். அப்படி எழுதுபவர்களின் பார்வை அது. நான் என் கருத்தை வெளிப்படையாகவே, உரக்கப் பேசி வருகிறேன்
இந்தியாவில் இந்திய அணி ஆடும் பிட்ச்கள் நல்ல கிரிக்கெட்டுக்கு உகந்ததல்ல என்ற விமர்சனத்தில் நான் தெளிவாகவே இருக்கிறேன். பந்துகள் கண்டபடி திரும்புகின்றன, போட்டிகள் இரண்டு அல்லது இரண்டரை நாட்களில் முடிந்து விடுகின்றன. என்னுடைய இந்தக் கருத்தில் மாற்றமில்லை” என்று கூறியுள்ளார்.