இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. மைக்கேல் கிளார்க், வெற்றியை உறுதிசெய்யும் ஆட்டநாயகனாக யார் இருப்பார் என கணித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக்கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வென்றால், டி20 உலகக்கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற சாதனைகளை படைக்கும்.
ஒருபுறம் இந்திய அணியே கோப்பை வெல்லும் என எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஐசிசி தொடர் என்றாலே இந்தியாவிற்கு வில்லனாக நியூசிலாந்து அமையும் என்பதால் அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. நியூசிலாந்து இரண்டு ஐசிசி கோப்பைகளை மட்டுமே இதுவரை வென்றுள்ள நிலையில், அதில் 2 ஃபைனலிலும் இந்தியாவையே வீழ்த்தி கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆட்டநாயகன் யார் என்பதை கணித்துள்ளார்.
சமீபத்திய உரையாடலில் பேசியிருக்கும் அவர், "பந்துவீச்சில் பல வேரியேசன்கள் வைத்திருந்தாலும், அழுத்தத்தின் கீழ் அந்த திறமைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். அத்தகைய திறன்களைக் கொண்டிருப்பதால் தான் உலகின் சிறந்தவராக பும்ரா இருக்கிறார். அவர் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்யும் முக்கிய காரணியாக இருந்து வருகிறார். இறுதிப் போட்டியில் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர் இறுதிப்போட்டியில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்" என்று கூறினார்.