“கேரள அரசியலில் இதுவரை உருவானவர்களில் மிகவும் தனித்துவமானவர் விஎஸ். அவர் பெயரே ஒரு பிராண்ட்!” என கேரள முன்னாள் முதலமைச்சர் வி எஸ் அச்சுதானந்தனின் தனிச்செயலாளர் சசிதரன் நாயர் ஒருமுறை தெரிவித்திருக்கிறார். கட்சி சார்புகளைக் கடந்து வெகுஜன ஆதரவாளர்களை உருவாக்கிய மிக முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவர் அச்சுதானந்தன். அத்தகைய ஒருவர் காலமானார் என்ற செய்திதான் கேரள மக்களை மிகுந்த சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அச்சுதானந்தனின் முழு பெயர் வெளிக்கக்காத்து சங்கரன் அச்சுதானந்தன். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்ரா கிராமத்தில் அக்டோபர் 20, 1923 அன்று பிறந்தவர். தனது 4 வயதில் தாயையும் 11 வயதில் பெற்றோரையும் இழந்தவர் அச்சுதானந்தன். தனது 11 வயதிலேயே தந்தையையும் இழந்ததால் கடின முயற்சியின் மூலமே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் கடக்க வேண்டியிருந்தது. ஏனெனில், இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தது அவரது கல்வியை அப்படியே நிறுத்திவிட்டது. அதோடு 11 வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. முதலில் தனது சகோதரரின் தையல் கடையில் வேலைக்குச் சேர்ந்த அவர் பின் தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.
1938 ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதி பி.கிருஷ்ணப்பிள்ளையின் கருத்துகளின் மூலம் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல இடதுசாரி அரசியல் நோக்கி நகர்ந்தார். இதற்கிடையில்தான் தென்னை நார் தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் பட்ட துயரங்களைக் கண்டு, அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காகப் போராடினார். பின் 1940ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் சேர்ந்தார்.
1946 புன்னப்ரா-வயலார் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். இதற்காக அவரைக் கைது செய்த காவல்துறை அவரை கடுமையாக சித்ரவதை செய்தது. பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார். பல ஆண்டுகள் அவர் சிறைவாசம் மற்றும் துன்பங்களை எதிர்கொண்டார். 1964ல் கம்யூனிஸ்ட் கட்சியில் பிரிவினை ஏற்பட்டது. அப்போது தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர்.
பின்னர் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) நிறுவன உறுப்பினராக இருந்த அச்சுதானந்தன், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகவும், 1985 இல் பொலிட்பீரோவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்தல் வாழ்க்கையில் 1965 முதல் 2016 வரை 10 கேரள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, ஏழு முறை வெற்றி பெற்றிருக்கிறார். 2006 ஆம் ஆண்டில், 82 வயதில் கேரள முதல்வராகப் பதவியேற்று வரலாறு படைத்தார்.
1998 ஆம் ஆண்டு கட்சியின் மாநில செயலாளராக பினராயி விஜயனை நியமிப்பதற்கு அச்சுதானந்தன் ஆதரவளித்த போதிலும், 2000 ஆம் ஆண்டில் இருவருக்குமிடையே பிரிவு ஏற்பட்டது. மக்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அச்சுதானந்தன் கட்சியின் உத்தரவுகளை மீறி துணிச்சலான நிலைப்பாடுகளை எடுத்தபோது, கட்சிக்குள் விரிசல்கள் அதிகரித்தன, இது இரு தலைவர்களுக்கும் இடையே மோதலுக்கும் வழிவகுத்தது. இது குறித்து காங்கிரஸின் எல்.ஓ.பி. சதீஷன் இந்தியா டுடேவிடம் பேசுகையில், “அவரது கட்சி அதன் சித்தாந்த நிலைப்பாட்டில் இருந்து விலகியபோது, அவர் ஒரு உண்மையான கம்யூனிஸ்டாகவே இருந்தார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
2006 முதல் 2011 வரையிலான தனது பதவிக் காலத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு அச்சுதானந்தன் தலைமை தாங்கினார்; சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தார்; பொதுக் கல்வியில் இலவச மென்பொருளை ஊக்குவித்தார்; முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்பார்வையிட்டார்; நில மாஃபியாவுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தினார்; மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அரசாங்க வெளிப்படைத்தன்மைக்காக கடுமையாகப் போராடினார். பின்னர் கேரளாவின் நிர்வாக சீர்திருத்தங்களுக்குத் தலைமை தாங்கினார்.
அதிகாரப்பூர்வ பதவிகளிலிருந்து விலகிய பிறகும், சமூக நீதிக்காக அவரது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. உடல்நலக் குறைவின் காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்தே பொது வாழ்க்கையில் இருந்து விலகியிருந்த அச்சுதானந்தன் 2021 ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தக் குழுவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து திருவனந்தபுரத்திலுள்ள வி. அருணின் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில்தான் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்திருக்கிறார்.
101 ஆண்டுகள் வாழ்ந்த அவருடைய வாழ்க்கை, சிரமங்களின் சுமந்தபடியே மக்களுக்காக நடந்த பயணமாகும். தன்னலமின்றி போராடி, பதவியின் உச்சத்தில் இருந்தபோதும் மக்கள் மனத்தில் எளிமையின் உருவமாக இருந்தவர். கேரளத்தின் நேர்மையின் நினைவாகவும், மக்கள் அரசியலின் சின்னமாகவும் அவர் வாழ்க்கை எப்போதும் பேசப்படும்.