Arrested pt desk
குற்றம்

'தடா'வில் ஆரம்பித்த 'வடை' சண்டை... மைலாப்பூரில் முடிந்த கொலைவெறி தாக்குதல் - நடந்தது என்ன?

சாப்பிட்ட கையால் வடையை எடுத்து விவகாரம் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல். அடுத்தடுத்து அரங்கேறும் கொலைவெறி தாக்குதலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஜெ.அன்பரசன்

மயிலாப்பூர் காவல் நிலையம் பின்புறம் ராமகிருஷ்ணபுரம் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியின் ஐந்தாவது தெருவில் 20 வயது மதிக்கத்தக்க சூர்யா என்பவரும், நான்காவது தெருவில் கவியரசு (26) என்பவரும், ஐந்தாவது தெருவில் 17 வயது சிறுவனும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு சிறுவன் ஒருவன் இவர்களது வீட்டுக்குச் சென்று மூவரிடமும் தங்களது நண்பர் பேசுவதற்கு அழைப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மூவரும் ராமகிருஷ்ணாபுரம் ஐந்தாவது தெரு பகுதியில் உள்ள முனைக்குச் சென்றபோது, அங்கு ஏற்கனவே பழக்கமான ராமகிருஷ்ணபுரம் 6-து தெரு பகுதியைச் சேர்ந்த மைத்ரன் (20) என்பவர் இருந்துள்ளார்.

அப்போது, சூர்யா, கவியரசு மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மைத்ரனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மறைந்திருந்த நபர்கள் சிலர் மூவரையும் கத்தியால் சாராமாரியாக தாக்கியுள்ளனர். மூவரும் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். மக்கள் வருவதை பார்த்து, மைத்ரன் உள்ளிட்ட நபர்கள் தப்பி ஓடியோடிள்ளனர். இதுகுறித்து, மயிலாப்பூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காயம்பட்ட 3 இளைஞர்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்:

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ராமகிருஷ்ணபுரம் 6-வது பகுதியைச் சேர்ந்த மைத்ரன் என்பவர் முன் விரோதம் காரணமாக தனது நண்பர்களோடு சேர்ந்து மூவரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதனையடுத்து தாக்குதல் நடத்திய மைத்ரன் மற்றும் 16 வயது இளம் சிறார் ஆகிய இருவரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். இதில், மைத்ரன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மைத்ரன் தரப்பினரும், தாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் மைத்ரன், சூர்யா, கவியரசு உள்ளிட்ட நபர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தபோது இவர்கள் அனைவரும் சேர்ந்து 12 நபர்களாக ஆந்திரா அருகே உள்ள தடா பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றதும், அங்கு மது குடித்து பின் போதையில் தடா அருவியில் குளித்து ஆட்டம் போட்டதும் தெரியவந்தது. பின்னர், சென்னைக்கு திரும்பி வந்தபோது மைத்ரன் உள்ளிட்ட ஆறு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக கிளம்பியதும், சூர்யா, கவியரசு உள்ளிட்ட ஆறு நபர்கள் வனப்பகுதியில் ரீல்ஸ் எடுத்துவிட்டு சற்று தாமதமாக இருசக்கர வாகனங்களில் கிளம்பியதும் தெரியவந்தது.

அடுத்தடுத்து அரங்கேறிய தாக்குதல்கள்:

இருசக்கர வாகனத்தில் வேகமாக கிளம்பிய மைத்ரன் தரப்பினர் அங்குள்ள ஹோட்டலில் உணவருந்த சென்ற போது, போதையில் இருந்த மைத்ரன் சாப்பிட்ட கையோடு ஹோட்டலில் இருந்த வடையை எடுத்துள்ளார். இதனால், ஹோட்டலில் இருந்த சக வாடிக்கையாளர்கள் இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் ஹோட்டல் உரிமையாளர், 'எச்சில் கையோடு வடையை எடுக்கலாமா?' எனக் கூறி மைத்ரனை திட்டியுள்ளார். இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கும், மைத்ரன் தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மைத்ரன் தரப்பினர், சூர்யா மற்றும் கவியரசு தரப்பினருக்கு ஃபோன் செய்து உடனடியாக ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு வந்த சூர்யா உள்ளிட்ட ஆறு நபர்கள் மைத்ரன் மற்றும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே நடந்த சண்டையை விலக்கி விட்டுள்ளனர். பின்னர், அனைவரும் இருசக்கர வாகனங்களில் சென்னையை நோக்கி வந்த போது, மைத்ரன் தரப்பினர் சூர்யா மற்றும் சூர்யா தரப்பினரிடம், 'ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியரை அடிக்காமல் சண்டையை எதற்காக விலக்கி விட்டாய்?' எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நண்பர்கள் 12 பேருக்கும் பிரச்னையான நிலையில், மைத்ரனை சூர்யா மற்றும் கவியரசன் அடித்துள்ளனர்.

இதனால், இவர்களுக்குள் இருந்த நட்பு பாதிக்கப்பட்டு அனைவரும் தனித்தனியாக சென்னை வந்தடைந்துள்ளனர் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சண்டையில் இருதரப்புக்குள்ளும் பிரச்னை எழ கடந்த மாதம் 26 ஆம் தேதி தற்போது தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுவனை, மைத்ரன் மற்றும் அவரது நண்பர்கள் மயிலாப்பூரில் வைத்து அடித்துள்ளனர். இதனால், மேலும் மைத்ரன் மற்றும் சூர்யா தரப்புக்கிடையே பகை அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தான், நேற்று இரவு மற்றொரு சிறுவனை வைத்து சூர்யா, கவியரசு மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய மூன்று நபர்களையும் மைத்ரன் சமாதானமாக சென்றுவிடலாம் என கூறி சமாதானம் பேச அழைத்து வந்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த 3 இளைஞர்கள் மீதும் மைத்ரன் தனது நண்பர்களோடு கத்தியால் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மைத்ரன் மற்றும் 16 வயது இளைஞர் ஆகிய இருவரிடமிருந்து இரண்டு கத்திகளை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.