ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் நேற்று தெலங்கானா சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து நடிகர் அல்லு அர்ஜுன் அவரது தரப்பு கருத்தை முன் வைத்தார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஈடுபட்ட உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ’விடுதலை 2’ படம், விமர்சன மற்றும் வசூல்ரீதியாக வரவேற்பைப் பெற்றுவருகிறது. இத்திரைப்படத்தைப் பாராட்டியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், ”மனித சமூக ஓர்மைக்கான ஆவேசமான அரசியலை அவசியமான நேரத்தில் அப்பட்டமாகவும் அதேநேரத்தில் நேர்மையான கலைபடைப்பாகவும் பதிவு செய்திருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பேரன்பும்” என அதில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமார், நடித்திருக்கும் படம் ’விடாமுயற்சி’. இப்படத்தின் இயக்குநரான மகிழ் திருமேனி படப்பிடிப்பின் இறுதி நாளான இன்று அவரது நன்றியை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”சார், உங்களுக்கு எல்லையற்ற அன்பும் நன்றியும். நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் எங்கள் அனைவருக்கும் நீங்கள் வழிகாட்டி,ஊக்கம் அளித்துள்ளீர்கள். விடாமுயற்சி உண்மையில் விடாமுயற்சியின் வெற்றியாகும், முழு குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது, சார். முதல் நாள் முதல் இன்று வரை நீங்கள் எனக்கு அளித்த அன்பு, அக்கறை மற்றும் ஆதரவுக்கு நன்றி சார்” என அதில் தெரிவித்துள்ளார்.
1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அனகோண்டா'. இதைத் தொடர்ந்து 'அனகோண்டா' படங்கள் வரிசையாக வந்தன. ஆனால், இதில் எந்தப் படமும் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், 'அனகோண்டா' படத்தை மீண்டும் எடுக்க சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளது. டாம் கோர்மிகன் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அனகோண்டா திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரத்குமார் நடிப்பில், அவரது 150வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது, ‘தி ஸ்மைல் மேன்’. ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி, இப்படத்தை உருவாக்கியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (டிச.23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, 2024ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றைப் பட்டியலிட்டுள்ளார். இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய 'ALL WE IMAGINE AS லைட்' என்ற இந்திய திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் இயக்கும் 'மெண்டல் மனதில்' எனும் புதிய திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பதுடன், அவரே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று பூஜையுடன் படபிடிப்பு பணிகள் தொடங்கின. இதில் மாதுரி ஜெயின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
’சலார்’ முதல் பாகம் இயக்கத்தில் தனக்கு முழு திருப்தியில்லை என்று கூறியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் ’சலார்’ படத்தை சரியாக எடுக்காமல் போய்விட்டேனோ என்ற ஆதங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ ’சலார்’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக இருந்தாலும் அது எனக்கு ஏமாற்றத்தைத்தான் அளித்தது. இன்னும் அதிகமான வரவேற்பை அப்படம் பெற்றிருக்க வேண்டும். அந்தவிதத்தில் சலார் முதல் பாகத்தை இயக்கியதில் நான் முழுமையான சந்தோஷத்தை அடையவில்லை. இதனால் ’சலார் 2’ படத்தை எனது சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகம், 'காந்தாரா சாப்டர் 1' என்று பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. 60 சதவீதம் நிறைவடைந்த இப்படத்தின் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் 2ஆதேதி வெளியாக நிலையில், தனது சொந்த ஊரை ஒரு சினிமா நகரமாக மாற்ற விரும்புவதாகவும், அதற்கு 'கெரடி பிலிம் சிட்டி' என மனதிற்குள் பெயர் வைத்திருப்பதாகவும் இயக்குநரும் ரிஷப் செட்டி தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் பெரிய அளவில் படங்கள் உருவானதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் 'காந்தாரா’ படம் இந்தப் பகுதியை பிரபலப்படுத்திவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
'வணங்கான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலா 25 விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதுதொடர்பாக இயக்குநர் பாலா, “25-ஆம் ஆண்டு திரைப்பயண விழா மற்றும் ’வணங்கான்’ இசைவெளியீட்டு விழா, நானே எதிர்பாரா அளவிற்கு என்னை இன்பக்கடலில் மூழ்கடித்துவிட்டது. எத்தனை எத்தனை அன்பு உள்ளங்கள், அத்தனை பேரும் வந்திருந்து வாழ்த்திச் சென்றதில் என் உள்ளம் மகிழ்ந்து நிறைந்தேன். நேரில் வர இயலாத சூழலலில், பலரும் தொலைபேசி வாயிலாக அழைத்தும் வாழ்த்து மழை பொழிந்தனர்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.