திருட்டு தொழிலை கைவிட நினைக்கும் ஒருவன், மீண்டும் திருடும் சூழல் ஏற்பட்டால்... அதுவே கர ஒன்லைன்
கரசாமி (தனுஷ்) வீட்டிலிருந்து பணத்தை திருடிவிட்டு ஓடிப்போய் பின்னர் பிழைக்க வழி இல்லாமல் திருடனாகவே வாழ்க்கை நடத்துகிறார். அவரின் காதல் மனைவி செல்லிக்காக (மமிதா பைஜூ) திருட்டை கைவிட்டு உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார். வருமானம் போதாமல் தவிக்கும் கரசாமி, தன் தந்தை கந்தசாமியிடம் (கே எஸ் ரவிக்குமார்) பண உதவி கேட்பதற்காக ஊருக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னர் தான் கந்தசாமியே டிராக்டர் வாங்க நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி சிரமப்படுகிறார் என்பது தெரிய வருகிறது. அவர் மட்டுமல்ல, அந்த ஊரில் பலர் வாங்கி கடனால் பாதிக்கப்பட்டிருக்கிறதும் தெரிகிறது. தன குடும்பத்தையும் ஊரையும் கடனிலிருந்து கரசாமி காப்பாற்றினாரா? மேலும் கரசாமி பிடிக்க கங்கணம் கட்டி தேடும் காவலதிகாரி பரமனின் (சுராஜ் வெஞ்சாரமூடு) திட்டம் என்ன ஆகிறது? என்பதெல்லாம் `கர' சொல்லும் மீதிக்கதை.
திருட்டை கைவிட நினைக்கும் ஒருவன், மீண்டும் திருடினால் தான் தன்னை நம்பி இருப்பவர்களை காப்பாற்ற முடியும் என்ற லைன் சுவாரஸ்யமான ஒன்று. அதனை நிறைய எமோஷன் கொஞ்சம் காமெடி கலந்து த்ரில்லராக கொடுத்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் ஆல்ஃப்ரெட் பிரகாஷ் - விக்னேஷ் ராஜா.
தனுஷ் படம் என்றாலே படத்தின் பிரதான பலம் தனுஷ் தான் என்பது அனைவரும் அறிந்ததே. இயலாமையை பிரதிபலிக்கும் நடிப்பில் தனுஷ் மாஸ்டரிங் செய்து வருகிறார் என்றே சொல்லலாம். வசனமே இல்லாமல் வெறும் நடிப்பால் அழுத்தமாக உணர்வுகளை கடத்துகிறார். அடுத்ததாக ஈர்ப்பது கே எஸ் ரவிக்குமார். மகனை பார்த்ததும் அவர் காட்டும் உணர்ச்சிகள், எதற்கு மகன் வந்தான் என தெரிந்ததும் நொந்து போவது, தான் ஏமாற்றப்பட்டதை சொல்லி அழுவது என மிக சிறப்பான நடிப்பு. வஞ்சகமாக திட்டமிடும் ரோலில் ஜெயராம், தனுஷை பிடிக்க துரத்தும் சுராஜ் எப்போதும் போல அவர்கள் நடிப்பால் அசத்துகிறார்கள். மமிதா பைஜூவுக்கு கதையில் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றாலும் உணர்ச்சிப்பூர்வமான இடங்களில் தனுஷுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். தனுஷ் உடன் க்ரைம் பார்ட்னராக வரும் கருணாஸ் ப்ரித்வி பாண்டியராஜன் சிறப்பு. ஒரே ஒரு காட்சியில் உறுத்தலான ஒட்டுமீசையுடன் வந்தாலும் அசத்துகிறார் ஆடுகளம் நரேன்.
ஒரு த்ரில்லர் சினிமா, அதற்குள் கடன் என்ற அமைப்புக்கு பின்னால் இயங்கும் அரசியலை தொட்டிருந்தது கவனிக்க வைக்கிறது. மேலும் வளைகுடா நாடுகளில் நடக்கும் போரினால், இங்கு லோனில் டிராக்டர் வாங்கிய விவசாயிகள் பெட்ரோல் வாங்க முடியாமல் கடன் பிரச்சனையில் சிக்குகிறார்கள் என்ற சங்கிலி தொடர்பும் சிறப்பு. கரசாமி திருடன் என தன் மீதிருக்கும் கரையை துடைக்க முயல்வதும், பரமன் என்ற போலீஸ் கரசாமியை பிடிக்க முடியவில்லை என்பதால் தன் மீது விழுந்த கரையை துடைக்க முயல்வதும் என இரண்டு எக்ஸ்ட்ரீம்களும் ரசிக்க வைக்கிறது. இப்படி படத்தில் பல நுணுக்கமான விஷயங்களை சேர்த்திருக்கும் எழுத்தாளர்கள் ஆல்ஃப்ரெட் பிரகாஷ் - விக்னேஷ் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்திலும் ஒரு இயல்புத்தன்மை சேர்க்கிறது. கிராமப்புறம் சார்ந்த ஒரு இசையை த்ரில்லருக்கு கொடுத்து படத்திற்கு வித்யாசம் சேர்த்திருக்கிறார் ஜி வி பிரகாஷ். கண்ணம்மா ஏ கண்ணம்மா பாடல் இதம். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பின் மூலம் பல காட்சிகளில் பரபரப்பு சேர்க்கிறார். மாயபாண்டியின் கலை இயக்கம் 90 கால கட்டங்களை கச்சிதமாக பிரதிபலிக்கிறது. தினேஷ் காசியின் சண்டைவடிவமைப்பு ஒவ்வொரு மோதலையும் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறது. அதிலும் இப்படத்தின் மாஸ்டர் பீஸ் காட்சியாக வங்கி கொள்ளை காட்சியை சொல்லலாம். மிக நேர்த்தியாக படத்தின் அத்தனை தரப்பும் பணியாற்றி இருந்தனர்.
இப்படத்தின் குறைகள் என சொல்வதென்றால், குடும்பம் சார்ந்த எமோஷனல் காட்சிகள் இன்னும் கொஞ்சம் இயல்பாகவும் அழுத்தமாகவும் இருந்திருக்கலாம். படம் துவங்கி ஹீரோவின் வறுமை, அவர் தந்தையை சந்திப்பது என சுவாரசியம் எதுவுமே இல்லாமல் நகர்கிறது. அதுவே மருத்துவமனை காட்சியிலிருந்து இடைவேளை காட்சி வரை பரபரப்பாகிறது படம். இரண்டாம் பாதி இன்னும் சூடு பிடிக்கும் என நினைக்கையில் மீண்டும் சுவாரஸ்யமாக எதுவும் இல்லாமல் நகர துவங்குகிறது. மேலும் இந்த சீரியஸான படத்தின் ஊடாக மெல்லிய நகைச்சுவை ஒன்றும் வருகிறது. அதை இன்னும் சிறப்பாக, தெளிவாக கையாண்டிருக்கலாம். சில காட்சிகள், காமெடியா? சீரியஸா? என்றே புரியாமல் போகிறது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் த்ரில்லர் காட்சிகளில் இருந்த சுவாரஸ்யம், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் இருந்திருந்தால், இது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்திருக்கும்.