நடிகர் விஜயின் திரைப்படங்களுக்கு வந்த சர்ச்சைகள் pt
சினிமா

‘புதிய கீதை’ முதல் ஜனநாயகன் வரை.. விஜய் படங்களுக்கு ஏற்பட்ட சர்ச்சைகள்.. ஒரு பார்வை!

நடிகர் விஜய்யின் படங்கள் இதுவரை சந்தித்த தடைகளும், சிக்கல்களும் குறித்து இங்கே பார்க்கலாம்..

PT WEB

நடிகர் விஜயின் திரைப்படம் வெளிவருகிறது என்றாலே ஏதேனும் ஒரு பிரச்சனையோடு வருகிறது என்ற அளவுக்கு கடந்த காலங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பட தலைப்பு சர்ச்சை, படத்தின் காட்சிகளால் சர்ச்சை, பட வசனத்தால் சர்ச்சை, மத ரீதியான சர்ச்சைகள் என தற்போது சென்சார் சர்ச்சையிலும் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சிக்கியுள்ளது. அந்த வகையில் இதற்கு முன்பு விஜய்யின் படங்கள் சந்தித்த தடைகள், சிக்கல்கள் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்..

புதிய கீதை - 2003

புதிய கீதை படம்

கடந்த 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகியிருந்த ‘புதிய கீதை’ திரைப்படத்துக்கு முதலில் கீதை என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘கீதை’ என்று பெயர் வைக்கக் கூடாது என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக படத்திற்கு ‘புதிய கீதை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு படம் வெளியானது.

காவலன் - 2011

காவலன் திரைப்படம்

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான காவலன் படத்தை திரையிடமாட்டோம் என சில திரையரங்கு உரிமையாளர்கள் கூறிய நிலையில், படம் வெளியாகக் கூடாது என விநியோகஸ்தர் ஒருவர் இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். விஜய்யின் முந்தைய சில படங்கள் சரியாக ஓடாத நிலையில், அதற்கு விஜய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதன் காரணமாக விஜய் நஷ்டஈடு கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில், காவலன் திரைப்படம் வெளியானது.

துப்பாக்கி - 2012

துப்பாக்கி

விஜய் நடிப்பில் மிகப் பிரமாண்ட வெற்றிபெற்ற துப்பாக்கி திரைப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் பெயரை மாற்றவேண்டும் என கள்ளத்துப்பாக்கி என்ற படக் குழுவினர் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக காட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்து, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகள் நீக்கப்பட்டு, சிலக் காட்சிகள் மியூட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த திரைப்படம் வெளியானது.

தலைவா - 2013

விஜயின் படத்திலேயே அதிக சர்ச்சையை ஏற்படுத்திய படம் என்றால் அது 2013ஆம் ஆண்டு வெளியான தலைவா திரைப்படம்தான். டைம் டூ லீட் என்கிற டேக் லைனுடன் தலைவா படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் எல்லாம் விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த பட வெளியீட்டுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.

தலைவா

தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்தைகளுக்கு பிறகு பிற மாநிலங்களில் படம் வெளியான 11 நாட்கள் கழித்து ‘டைம் டூ லீட்’ என்கிற வாசகம் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் படம் வெளியிடப்பட்டது.

கத்தி - 2014

Kaththi

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படத்தை அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தாகக் கூறி எதிர்ப்பு கிளப்பியது. எனினும் இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டு திட்டமிட்டபடி படம் வெளியானது.

புலி - 2015

புலி திரைப்படம்

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படம் வெளியான அதே நாளில், படத்தின் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து படத்தின் அதிகாலை காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு பகல் காட்சி திரையிடப்பட்டது.

தெறி - 2016

தெறி

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தெறி பட வெளியீட்டின்போது விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் செங்கல்பட்டு உட்பட்ட மாநிலத்தின் பல திரையரங்குகளில் இந்தப் படம் வெளியிடப்படவில்லை.

மெர்சல் - 2017

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா ஆகிய வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்த H. ராஜா ‘ஜோசப் விஜய்’ எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த திரைப்படம் வெளியாகும் முந்தைய நாள் வரை படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில், படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், படம் வெளியாவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் சென்சார் வழங்கப்பட்ட நிலையில், மெர்சல் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியானது.

சர்க்கார்- 2018

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சர்கார் படம் வெளியானதைத் தொடர்ந்து அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கும் படக்குழுவுக்கும் பெரும் பிரச்சனை வெடித்தது. இப்படத்தில் வரும் ஒரு காட்சியில், அரசு வழங்கிய இலவசப் பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்ததோடு, அரசை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

இந்த படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தமிழ்நாடு அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்த நிலையில், பல்வேறு இடங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாஸ்டர் - 2021

அதே போல 2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் விஜய்யின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தினர். அதோடு நெய்வேலியில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதுடன் , அவரை சென்னை வரை அவர்களது காரிலேயே அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

Master JD

கொரோனா காலத்தில் இந்த திரைப்படம் வெளியான நிலையில், அப்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இது தொடர்பான விவகாரங்களும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பீஸ்ட் - 2022

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியது. இந்த படத்தில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாகவும், வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறி, கத்தார், குவைத் நாடுகள் இந்த படத்தை தடை செய்தன.

வாரிசு, லியோ - 2023

கடந்த 2023-ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில் உருவான வாரிசு படத்துக்கு ஆந்திராவின் கடும் எதிர்ப்பு எழுந்தது. அங்கு அதிக திரையரங்குகள் வாரிசு படத்துக்கு ஒதுக்கப்பட்டதாகவும், தெலுங்கு படத்துக்கே அதிக தியேட்டர்கள் ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

வாரிசு

அதே 2023-ல் வெளியான லியோ திரைப்படமும் பெரிய அளவிலான சர்ச்சையில் சிக்கியது. படத்தின் ட்ரெய்லரில் விஜய் ஒரு குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்தியது கடும் கண்டனத்திற்குள்ளான நிலையில், திரையரங்குகளில் அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் வெளியீட்டின்போது படத்திற்கு அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜனநாயகன் - 2026

ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது

இந்த வரிசையில் தற்போது ஜனநாயகன் திரைப்படமும் இணைந்துள்ளது. ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில், படத்துக்கு சென்சார் வழங்க தணிக்கை குழு தாமதம் செய்தது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில், வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஜனவரி 9-ம் தேதி காலை காட்சிகள் கட்டாய ரத்து என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்ற கவலையும் அதிகரித்துள்ளது.