ஜனநாயகன்| ”தணிக்கை வாரியமும் அரசியல் ஆயுதமாகி விட்டது..” - ஜோதிமணி எம்.பி
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், தணிக்கை வாரியம் அரசியல் ஆயுதமாகி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் படம் வெளியீடு தாமதமாகி, திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நடந்துவருகிறது. தணிக்கை சான்றிதழ் பெருவதற்கு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது, படத்திற்கு U/A சான்றிதழையும் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் தற்போது வரை தணிக்கைச் சான்று தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது..
இந்த விவகாரம் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனைப் படக்குழு செய்ததாகவும், ஆனால் அதன்பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
தொடர்ந்து தணிக்கை வாரியத்தின் தரப்பிலிருந்தும் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியான ஜனவரி 9 அன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தசூழலில் படம் ரிலீஸ் ஆகுமா? எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கவலை அதிகரித்துள்ளது..
படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான செயல்..
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்
ஒரு திரைப்படம் என்பது பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கானவர்களின் கடின உழைப்பில் உருவாகிறது.
அதை இப்படி முடக்க நினைப்பது படைப்புச் சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக முடக்கப்படுவது இன்னும் ஆபத்தானது. அமலாக்கத்துறை,சிபிஐ ,வருமானவரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் மோடி அரசின் அரசியல் ஆயுதமாகி விட்டது. இதை நாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நான் தணிக்கை குழு உறுப்பினராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அதன் செயல்பாடுகளை நான் நன்கு அறிவேன்.என்னளவில் இந்த தொழில்நுட்ப யுகத்தில் தணிக்கை வாரியம் என்பது காலாவதியாகிப் போன ஒரு அமைப்பு. ஒரு திரைப்படத்தை ஏற்பதும்,மறுப்பதும் மக்கள் கையில் தான் இருக்கிறது.
ஒரு திரைப்படத்தை நாம் தணிக்கை செய்துகொண்டிருக்கிற அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான தணிக்கை செய்யப்படாத வீடியோக்கள் ,காட்சிகள் தொலைக்காட்சி, யு டியூப்,சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிக்கொண்டிருக்கிறது. இதை பல கோடிப்பேர் பார்க்கின்றனர்.இந்தச் சூழலில் திரைப்படத்தை மட்டும் தணிக்கை செய்வதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே நிதர்சனம்.
பெண்களை ஆபாசமாகப் பேசுவது,சித்தரிப்பது,இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது தணிக்கை விதிகளின் படி தவறானது. ஆனால் இவை இல்லாமல் வெளிவருகிற படங்கள் மிகவும் குறைவு. தணிக்கை வாரியம் இம்மாதிரியான விசயங்களில் பெரும்பாலும் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. சான்றிதழை மறுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே தணிக்கை வாரியம் என்பது கலைக்கப்பட வேண்டியது. அதுவரை அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

